சிறுமி கொலை.. புதுச்சேரியில் நாளை பேரணி.. நாளை மறுநாள் பந்த்.. ‛இந்தியா’ கூட்டணி - அதிமுக அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் 9 வயது நிரம்பிய சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் ‛இந்தியா’ கூட்டணி சார்பில் நாளை அமைதி பேரணியும் (மார்ச் 7), நாளை மறுநாள் (மார்ச் 8)பந்த்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாளை மறுநாள் அதிமுக பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் ‛இந்தியா’ கூட்டணியும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஒட்டுமொத்த புதுச்சேரியும் இன்றைய தினம் அதிர்ச்சியில் உறைந்தது. இதற்கு அங்கு நடந்த 9 வயது சிறுமியின் கொடூர கொலை தான் காரணமாகும். அதாவது புதுச்சேரியை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2ம் தேதி வீட்டு அருகே விளையாடிய நிலையில் திடீரென்று மாயமானார்.

அக்கம் பக்கத்தில் குடும்பத்தினர் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதனால் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 4 நாட்கள் ஆகியும் சிறுமி கிடைக்கவில்லை.
இந்நிலையில் தான் சிறுமியின் வீட்டருக்கே 100 மீட்டர் தொலைவில் ஒரு வாய்க்காலில் சாக்கு மூட்டையில் அவரது உடல் இருந்தது. சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தது. மர்மநபர்கள் அவரை கொன்று உடலை சாக்குமூட்டையில் கட்டி வீசியிருப்பது தெரியவந்தது. ஜிப்மர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. வீடியோ பதிவுடன் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அப்போது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.
குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். சிறுமியின் குடும்பத்துக்கு ஆதரவாக புதுச்சேரி மக்கள் வீதிகளில் இறங்கி போராட தொடங்கினர். சிறுமியை கொன்ற குற்றவாளிகளை கைது செய்து தூக்கிலிட வேண்டும் என அவர்கள் போராட்டம் நடத்தினர். கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். சிறுமியின் கொலைக்கு போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து இருப்பதே முக்கிய காரணம் எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த போராட்டங்களால் மொத்த புதுச்சேரியும் பரபரப்பானது. இதையடுத்து சிறுமியின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூ 20 லட்சத்தை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். அதோடு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து சிறுமியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக போலீசார் தற்போது வரை 2 பேரை கைது செய்துள்ளனர். இருப்பினும் அவர்களின் பெயர், விபரங்களை வெளியே கூறவில்லை.
இந்நிலையில் 9 வயது சிறுமியின் கொலைக்கு திமுக அமைச்சர் உதயிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தகைய சூழலில் தான் சிறுமியின் கொலைக்கு நீதி கேட்டும், அமைச்சர் நமச்சிவாயம் தனது பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி நாளை மாலை 4 மணிக்கு ‛இந்தியா’ கூட்டணி சார்பில் புதுச்சேரியில் அமைதி பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நாளை மறுநாள் (மார்ச் 8) புதுச்சேரியில் பந்த் நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முழுஅடைப்பில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட ‛இந்தியா’ கூட்டணி கட்சியினர் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக சிறுமி படுகொலை சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி சிறுமியின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டும் எனவும் புதுச்சேரியில் நாளை மறுநாள் (மார்ச் 8)பந்த் நடத்த இருப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை புதுச்சேரி மாநில அதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்து இருந்த நிலையில் ‛இந்தியா’ கூட்டணியும் நாளை மறுநாள் பந்த் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications