சிறுமி கொலையால் கொந்தளிக்கும் புதுச்சேரி.. விரைவு நீதிமன்றம் அமைத்து ஒரு வாரத்தில் தண்டனை -தமிழிசை
புதுச்சேரி: புதுச்சேரியில் 9 வயது நிரம்பிய சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விரைவு நீதிமன்றம் அமைத்து குற்றவாளிகளுக்கு ஒரு வாரத்தில் தண்டனை வழங்கப்படும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசமாக கூறியுள்ளார்.
புதுச்சேரியை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2ம் தேதி வீட்டு அருகே விளையாடி கொண்டிருந்தார். அதன்பிறகு மாயமானார். சிறுமியின் குடும்பத்தினர் அவரை தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதையடுத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதற்கிடையே தான் சிறுமியின் வீட்டருக்கே 100 மீட்டர் தொலைவில் ஒரு வாய்க்காலில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது. தகவலறிந்த போலீசார் அங்கு சென்று சாக்கு மூட்டையை அவிழ்த்து பார்த்தனர்.
அப்போது மாயமாகி இருந்த சிறுமி பிணமாக இருந்தார். சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் இருந்தது. யாரோ மர்மநபர்கள் அவரை கொன்று உடலை சாக்குமூட்டையில் வைத்து சாக்கடையில் வீசியிருப்பது தெரியவந்தது. ஜிப்மர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. வீடியோ பதிவுடன் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
அப்போது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது சிறுமியின் குடும்பத்தினரையும் புதுச்சேரி மக்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சிறுமி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி போராட்டம் நடத்தப்பட்டது. சிறுமியின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூ 20 லட்சத்தை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
அதோடு சிறுமியின் கொலைக்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை பெற்று தரப்படும் என முதல்வர் உறுதி அளித்திருந்தார்.
இதையடுத்து சிறுமியின் உடலை பெற்றோர் பெற்றுக் கொண்டனர். இந்நிலையில் தான் சிறுமியின் உடலுக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் சிறுமியின் தாய் உள்பட குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் அளித்தார்.
அப்போது அவரை சூழ்ந்து பத்திரிகையாளர்கள் கேள்விகள் எழுப்பினர். அதற்கு தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசமாக பதிலளித்தார். விரைவு நீதிமன்றம் அமைத்து ஒரு வாரத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:
சிறுமியின் மரணத்தில் ஒரு தாயாக நான் நிலைகுலைந்து நிற்கிறேன். போராட்டம் நடத்துபவர்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். தமிழகத்தில் போதைப்பொருளை உலவ விட்டு கொண்டு இருப்பவர்களில் சிலர் புதுச்சேரியில் இருப்பதாக தகவல் வந்துள்ளது. அவர்களும் பிடிக்கப்படுவார்கள். இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள். மக்கள் விமர்சனம் செய்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன். சிறுமியின் தாயுடன் நான் நிற்கிறேன். இது வெறும் போதையில் மட்டும் என்று சொல்வதை விட பாதை மாறிய இளைஞர்களாலும் நடந்துள்ளது. இது சமுதாயத்தின் அவலம்.
2 மிருகங்கள் பிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உச்சப்பட்ச தண்டனை என்பது கிடைக்கும். இவர்கள் 2 பேருடன் இன்னும் யாராவது இருந்தார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த விசாரணையை தொடர்ந்து யாராவது பிடிபட்டால் நிச்சயமாக உச்சப்பட்ச தண்டனை வழங்கப்படும். சிறுமி படுகொலை விவகாரத்தில் ஒரு வாரத்தில் தண்டனை கிடைக்கும். விரைவு நீதிமன்றம் அமைத்து ஒருவாரத்தில் நீதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும். எந்த தாய்க்கும் இதுபோன்ற கொடுமை நடைபெற கூடாது; குழந்தையுடன் தாயாருடன் நான் நிற்கிறேன்'' என ஆவேசமாக கூறினார்.












Click it and Unblock the Notifications