டிராபிக்கில் நின்ற வாலிபர்.. புல்லட்டில் புகுந்த சாரை பாம்பு.. அலறியடித்து ஓட்டம்!
புதுச்சேரி: புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசலில் நின்றிருந்த வாலிபரின் புல்லட்டில் சாரைப் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
புதுச்சேரி அருகே கரியமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் சொந்த வேலை காரணமாக இன்று தனது இருசக்கர வாகனத்தில் புதுச்சேரி நகருக்கு வந்துள்ளார். அப்போது, புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் உள்ள இந்திராகாந்தி சதுக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக தனது புல்லட்டில் நின்றுகொண்டிருந்தார்.
இந்நிலையில் விக்னேஷ் மீது திடீரென மரத்திலிருந்து சாரைப் பாம்பு ஒன்று விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விக்னேஷ், இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு தெரித்து ஓடினார். இதனையடுத்து அந்த பகுதியில் பொதுமக்கள் கூட்டமாக கூடினர்.
பின்னர் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு வந்த வனத்துறை ஊழியர்கள், இருசக்கர வாகனத்தில் புகுந்திருந்த பாம்பை, மெக்கானிக் உதவியுடன் வெளியே எடுத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அண்மைகாலமாக புதுச்சேரி நகரில் பாம்புகள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இதனை கருத்தில்கொண்டு வனத்துறை ஊழியர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே கொரோனா தொல்லை வேறு.. இதில் பாம்புகள் வேறயா.. என்று புதுவை மக்கள் புலம்புகின்றனர்.