சீங்கப்பூரிலிருந்து புதுச்சேரி வந்த வாலிபருக்கு கொரோனா அறிகுறி... ஜிப்மரில் தீவிர சிகிச்சை
Recommended Video
புதுச்சேரி: சிங்கப்பூரில் இருந்து புதுச்சேரிக்கு வந்த வாலிபருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால், அவரை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருடைய ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சீனா முழுவதும் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு 300 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் ஆயிரகணக்கானோருக்கு நோய் தாக்குதல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்க 8 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவு கோரிமேடு அரசு தொற்று நோய் மருத்துவமனையிலும், ஜிப்மர் மருத்துவமனையிலும் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் மருத்துவமனைகளில் 5 படுக்கைகள் கொண்ட தனி பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பணி நிமித்தமாக சிங்கப்பூர் சென்றார். அங்கு அவர் மூன்று சீனர்களுடன் பழகி வந்துள்ளார். இதனிடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புதுச்சேரி திரும்பிய அந்த வாலிபருக்கு, கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் கோரிமேடு பகுதியில் உள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதை கண்டறிந்தனர்.

இதனை தொடர்ந்து அந்த வாலிபருக்கு, அங்குள்ள தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு புனேவில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் வந்த பிறகுதான் அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பது உறுதி செய்யப்படும்.












Click it and Unblock the Notifications