போராட்டம் நடத்த வேண்டியதுதான்.. அதுக்காக இப்படி விபரீதமாகவா.. உயிர் போச்சுன்னா என்ன செய்வது
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த ஒரு நூதன போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் தூக்கில் தொங்குவது போல நடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த பரபரப்பு.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு புதுச்சேரி - கடலூர் நூறடி சாலையில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது.
ஆனால் மக்கள் வரிப்பணத்தில் புதியதாக கட்டிய மேம்பாலம் சில மாதங்களிலேயே விரிசல் அடைந்து, குண்டும் குழியுமாக மேம்பாலம் காட்சி அளிக்கிறது.
போராட்டம்
ஆம் ஆத்மி கட்சி சார்பில் பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், மேம்பாலத்தை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட அக்கட்சியினர் முடிவு செய்தனர்.
புதுவை அரசுக்கு கண்டனம்
புதுச்சேரி அரசுக்கு மேம்பாலத்தின் அவல நிலையை தெரிவிக்கும் வகையில், ஆம் ஆத்மி கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சுந்தராஜன் கட்சி நிர்வாகிகளுடன் மேம்பாலத்திற்கு வருகை தந்தார்.
நூதன போராட்டம்
மேம்பாலத்தின் மீது ஏறிய அவர் அங்கிருந்த மின் கம்பியில் தூக்கு போட்டு தொங்கியபடி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அவருடன் வந்த ஆம் ஆத்மி கட்சியினர் புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தவிர்க்க வேண்டும்
இந்த போராட்டத்தால் அந்தப் பாதை வழியாக போனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போராட்டம் நடத்த வேண்டியதுதான். ஆனால் அதற்காக இப்படி விபரீதமாக முயற்சி செய்வது சரியா.. ஒன்று கிடக்க ஒன்று ஆகி விட்டால் என்ன செய்வது.. உயிருடன் விளையாடலாமா என்று பலரும் முனுமுனுத்தனர்.
அரசு நடவடிக்கை தேவை
புதுச்சேரி மேம்பாலம் கட்டி திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே பாலத்தின் பக்கவாட்டில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அதன் அருகில் வசிக்கும் மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.