அன்புமணி - ராமதாஸ் இடையே வார்த்தை மோதலுக்கு இடையே.. தொண்டர்கள் செய்த காரியம்.. ஒரே பரபரப்பு
புதுவையில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ்க்கும், தலைவர் அன்புமணி ராமதாஸ்க்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக பொதுக்குழு முடிந்து செல்லும் போது ராமதாஸ் காரை வழிமறிக்கும் வகையில் சுற்றி நின்ற பாமகவினர், அன்புமணி ராமதாஸ் வாழ்க! வாழ்க.. என கோஷம் எழுப்பினர்.
பாமக பொதுக்குழு கூட்டம் இன்று புதுவையில் நடந்தது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொண்டர்கள் பங்கேற்று இருந்தனர். அப்போது, பாமக இளைஞர் அணி தலைவராக, தனது மகள் வழி பேரன் முகுந்தனை அறிவித்தார். அதாவது அன்புணியின் அக்கா மகனுக்கு இளைஞர் அணி பதவியை கொடுப்பதாக அறிவித்தார்.

இதை மேடையில் இருந்து கேட்ட அன்புமணி உடனடியாக இதற்கு மறுப்பு தெரிவித்தார். கட்சியில் சேர்ந்த சில மாதங்களிலேயே அவருக்கு இவ்வளவு பெரிய பதவி வழங்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். கட்சியில் சேர்ந்தே 4 மாதங்கள் தான் ஆகிறது. களத்தில் இறங்கி வேலை பார்க்க அவருக்கு என்ன அனுபவம் உள்ளது. அவருக்கு ஏன் இளைஞர் அணி தலைவர் பதவி என்று கேள்வி எழுப்பினார்.
இதில் ராமதாஸ் கோபம் அடைந்தார். உடனே பேசிய ராமதாஸ், இது நான் உருவாக்கிய கட்சி. என்று அழுத்தமாக கூறினார். மேலும் நான் சொல்வதை தால் எல்லாரும் கேட்க வேண்டும். அப்படி கேட்க முடிந்தால் இருங்கள். இல்லாவிட்டால் கட்சியை விட்டு விலகிக் கொள்ளுங்கள். அது யாராக இருந்தாலும் சரி.. என்று ஆத்திரத்துடன் கூறினார்.
மைக்கை கீழே வீசிய அன்புமணி
இது அன்புமணிக்கு அதிர்ச்சியை கொடுத்தது. ராமதாசின் பேச்சால் அதிருப்தியடைந்த அன்புமணி, நீங்களே பேசுங்கள்.. நீங்களே எல்லாத்தையும் பண்ணுங்கள்.. என்று கோபத்துடன் கூறினார். அப்போது ராமதாஸ் மீண்டும் மீண்டும் இது நான் உருவாக்கிய கட்சி என்று அன்புமணியை பேசவிடாமல் பேசினார். இதனால் மீண்டும் கோபடமைந்த அன்புமணி, "சென்னை பனையூரில் நான் ஒரு அலுவலகம் திறந்திருக்கிறேன். என்னை பார்த்து பேசுபவர்கள் அங்கு வரலாம்" என்று கூறிவிட்டு மைக்கை மேடையிலேயே வீசிவிட்டு சென்றார்.
பொதுக்குழு மேடையிலேயே ராமதாசும் - அன்புமணியும் நேருக்கு நேர் வார்த்தை போரில் ஈடுபட்டது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே வெளியே நின்ற தொண்டர்கள் அன்புமணி வாழ்க.. அன்புமணி வாழ்க என்று முழக்கமிட்டுகொண்டே இருந்தனர். அப்போது ராமதாஸ் காரில் வெளியே கிளம்பினார்.
ராமதாஸ் காரை சுற்றி நின்ற தொண்டர்கள்
ஆனால் ராமதாஸ் காரை நாலாபுறமும் சுற்றி நின்ற பாமக தொண்டர்கள் அன்புமணி வாழ்க அன்புமணி வாழ்க என்று கோஷம் எழுப்பினர். நீண்ட நேரமாக அங்கு தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால், கார்கள் கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதில் ராமதாஸ் காருக்கு உள்ளேயே இருந்தார். அன்புமணி வெளியே நின்றபடி தொண்டர்களிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்.
இது நான் உருவாக்கிய கட்சி.. என் பேச்சை கேட்பவர்கள் இருக்கலாம். இல்லாவிட்டி கிளம்பலாம் என ராமதாசும், சென்னை பனையூரில் கட்சி அலுவலகம் திறந்திருக்கிறேன் என்று அன்புமணியும் பேசியிருப்பது பாமக தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போதாது என்று, பொதுக்குழு முடிந்து செல்லும் போது ராமதாஸ் காரை வழிமறிக்கும் வகையில் சுற்றி நின்ற பாமகவினர், அன்புமணி ராமதாஸ் வாழ்க! வாழ்க.. என கோஷம் எழுப்பியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications