புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தில் அதிமுக பங்கு கேட்கும்.. மாநில செயலாளர் திட்டவட்டம்!
புதுச்சேரி: புதுச்சேரியில் என்.டி.ஏ கூட்டணியில் அதிமுகவுக்கு 2 சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் அமையும் அடுத்த ஆட்சியில் அதிமுக உரிய பங்கைக் கேட்கும். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அமையவுள்ள புதிய அமைச்சரவையில் அதிமுக அமைச்சர்கள் இடம்பெறுவது உறுதி என்றும் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது. ஒருபக்கம் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே தொகுதிப்பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாமல் இருந்து வருகிறது. மறுபக்கம் மீண்டும் பாஜகவுடன் தான் கூட்டணி என அறிவித்தார் முதலமைச்சர் ரங்கசாமி. இருந்தாலும் சில நாட்களுக்கு முன்பு நடைபெறுவதாக இருந்த தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை ரங்கசாமி புறக்கணித்தார்.

மேலும் பாஜகவுடன் கூட்டணியை ரங்கசாமி முறித்துக்கொள்ள இருப்பதாக கூட வதந்திகள் பரவின. ஆனால் தற்போது முதலமைச்சர் ரங்கசாமி பாஜகவுடன் தான் கூட்டணி என உறுதி செய்தார். நேற்று புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்தது.
புதுச்சேரியில் இருக்கும் 30 தொகுதிகளில் 16 தொகுதிகளில் ரங்கசாமியின் என்.ஆர் காங்கிரஸ் கட்சியும், 10 தொகுதிகளில் பாஜகவும், தலா இரண்டு தொகுதிகளில் லட்சிய ஜனநாயக கட்சி மற்றும் அதிமுக ஆகியோரும் போட்டியிட உள்ளன. பாஜக சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அன்பழகன், "புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாய கூட்டணி தான் ஆட்சியமைக்கும். புதுச்சேரியில் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் அதிமுக பங்கு கேட்கும். அமைச்சரவையில் அதிமுக கண்டிப்பாக இருக்கும்" என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தொகுதிப் பங்கீடு குறித்து எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வழிகாட்டுதலின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். "கூட்டணி தர்மத்தைக் காக்க வேண்டும் என்பதற்காகவும், ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தவும் எடப்பாடி பழனிசாமியின் அனுமதியுடன் இந்த 2 தொகுதிகளை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். எண்ணிக்கையை விட, கூட்டணியின் வெற்றியே எங்களுக்கு முக்கியம்" என அவர் தெரிவித்தார்.
தேர்தலுக்குப் பிந்தைய சூழல் குறித்துப் பேசிய அன்பழகன், புதுச்சேரியில் அமையும் அடுத்த ஆட்சியில் அதிமுகவின் பங்கு தவிர்க்க முடியாததாக இருக்கும் என்பதை உறுதிபடக் கூறினார். புதுச்சேரி அரசின் அதிகாரத்தில் அதிமுக உரிய பங்கைக் கேட்கும். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அமையவுள்ள புதிய அமைச்சரவையில் அதிமுக அமைச்சர்கள் இடம்பெறுவது உறுதி என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications