மீண்டும் வருகிறது "மாஸ்க்.." பொது இடங்களில் கட்டாயம் போடணும்.. கொரோனா உயிரிழப்பால் பரபர அறிவிப்பு
புதுச்சேரி: கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் மீண்டும் மாஸ்க் கட்டாயம் என்ற அறிவிப்பு வந்து கொண்டிருக்கிறது. அதன்படி காரைக்காலிலும் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது
சீனாவில் கடந்த 2019இல் தோன்றிய கொரோனா, 2020இல் இந்தியாவுக்குள் நுழைந்தது. முதலில் கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு உலகெங்கும் ஒரு வழி செய்துவிட்டது.
அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளுமே கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. வேக்சின் உள்ளிட்ட பணிகளால் கொரோனா இப்போது தான் கட்டுக்குள் வந்திருக்கிறது.

கொரோனா
உலகளவில் கொரோனா வேக்சின் பணிகளைச் சிறப்பாக மேற்கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இதன் காரணமாகவே வெகு விரைவில் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்தது. இதற்கிடையே கடந்த பிப், மாதம் முதல் உலகின் பல பகுதிகளிலும் வைரஸ் பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. புதிய எக்ஸ்.பி.பி.1.16 வகை ஓமிக்ரான் கொரோனா காரணமாகவே வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா
இந்த திரிபு இந்தியாவிலும் நுழைந்துள்ள நிலையில், கடந்த ஒரு மாதமாக இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு மெல்ல உயர்ந்து வருகிறது. ஒரு மாதத்தில் இப்போது கொரோனா தினசரி பாதிப்பு 3000ஐ தாண்டி பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 3,641 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது, இதன் மூலம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

தமிழ்நாடு, புதுவை
தமிழகம் மற்றும் புதுவையும் கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் இப்போது 30 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 35 வயதான காரைக்காலைச் சேர்ந்த பெண் ஒருவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த பெண்ணுக்கு சில இணை நோய்கள் இருந்ததாகவும் இதன் காரணமாகவே அந்த பெண் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

1.5 ஆண்டுகளுக்குப் பின் முதல் உயிரிழப்பு
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2021இல் தான் கொரோனாவால் மரணம் பதிவாகியிருந்தது. இப்போது சுமார் 1.5 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. கொரோனா தீவிரம் குறைந்தாலும் கூட முறையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்ற வேண்டும் என்றே ஆய்வாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே காரைக்காலில் பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்க் கட்டாயம்
இது குறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு பொது இடங்களில் மக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். மேலும் தியேட்டர், வணிக வளாகங்கள், மருத்துவமனை மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் மற்றும் சமூக இடைவெளி கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications