அரவிந்தர் ஆசிரம அன்னையின் 142 வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. குவிந்த வெளிநாட்டினர்
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் நடைபெற்ற அன்னையின் 142 வது பிறந்த நாள் விழாவில் நாடு முழுவதிலிருந்தும் வந்த ஏராளமான பக்தர்கள் கூட்டு தியானம் மற்றும் தரிசனத்தில் ஈடுபட்டனர்.
சுற்றுலா நகரமான புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமம் உலக அளவில் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமாக விளங்கி வருகிறது. உள்நாடு மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரகணக்கான பக்தர்கள் ஆசிரமத்திற்கு வருகைபுரிந்து, இங்கேயே சில நாட்கள் தங்கியிருந்து தியானம் செய்து மனதை அமைதிப்படுத்திச் செல்கின்றனர்.
அதேபோல் புதுச்சேரியை அடுத்த ஆரோவில், சர்வதேச நகரை அமைத்த அன்னை பிரான்ஸ் தலைநகர் பாரீசில், 1878 பிப்ரவரி மாதம் 21 ம் தேதி பிறந்தார். அன்னையின் இயற்பெயர் மிர்ரா அன்போன்ஸா ஆகும்.
சிறிய வயதிலேயே கல்வியில் சிறந்து விளங்கிய அன்னை, அரவிந்தரின் ஆன்மீக கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 1914-ல் புதுச்சேரி வந்தார். அன்னையின் பெரும் முயற்சியால் தான் புதுச்சேரியில் அரவிந்தர் ஆசிரமும், ஆரோவில் சர்வதேச நகரமும் தோற்றுவிக்கப்பட்டன.
இன்று அன்னையின் 142 வது பிறந்த நாளையொட்டி, இன்று காலை முதல் அரவிந்தர் ஆசிரமத்தில், அன்னை வசித்த அறை பக்தர்களின் தரிசனத்திற்கு திறக்கப்பட்டது. மேலும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அன்னை சமாதியை பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.
பின்னர் கூட்டு தியானமும் மேற்கொண்டனர். அன்னையின் பிறந்தநாளையொட்டி அரவிந்தர் ஆசிரமத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.