பால் சாப்பிடுங்க.. கூடவே மறக்காம ஓட்டுப் போடுங்க.. புதுவையில் நூதன விழிப்புணர்வு பிரச்சாரம்
புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்குப்பதிவு எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவை தொகுதிக்கான தேர்தலும், காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இத்தேர்தலை வெளிப்படையாகவும், அமைதியான முறையிலும் நடத்துவதற்காக புதுச்சேரி மாநில தேர்தல் துறை பல்வேறு வகையில் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
மேலும், தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் விவிபாட் இயந்திரம் குறித்தும் புதுச்சேரி முழுவதும் தேர்தல் துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரி அரசு நிறுவனமான பாண்லே மூலம் பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக கடைகளில் விற்கப்படும் பால் பாக்கெட்டுகளில் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வாசகங்களை பதிவு செய்து வெளியிட்டு வருகிறது தேர்தல் துறை.
பாண்லே பால் பாக்கெட்டில், வாக்கு முக்கியமானது, தவறாமல் வாக்குகளை பதிவு செய்யுங்கள் என்றும், தேர்தல் நாள் 18-04-2019 என்ற வாசகங்கள் தேர்தல் துறை பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் துறையின் இந்த வித்தியாசமான முறையிலான பிரச்சாரம் மக்களை எளிதில் சென்று, இந்த தேர்தலில் வாக்குபதிவு சதவீதம் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.