புதுச்சேரி சபாநாயகர் பதவியை கைப்பற்றிய பாஜக.. ஏம்பலம் செல்வம் போட்டியின்றி தேர்வு.. இதுதான் முதல்முறை
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை சபாநாயகராக பாஜக எம்எல்ஏ ஏம்பலம் செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்துடன் இணைந்து புதுச்சேரிக்கும் கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதையடுத்து அங்கு என்ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. கடந்த மே மாதம் 7ஆம் என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், புதுச்சேரி சட்டசபை சபாநாயகர் பதவிக்குத் தேர்தல் நடத்துவது குறித்துக் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது.
இந்தச் சூழலில் என்ஆர்காங்கிரஸ்- பாஜக கூட்டணி சார்பில் மணவெளி தொகுதி எம்எல்ஏ ஏம்பலம் செல்வம் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது வேட்புமனுவை முதல்வர் ரங்கசாமி முன்மொழிந்திருந்தார்.
நேற்று பகல் 12 மணியுடன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிந்த நிலையில், வேறு யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை. இதன் காரணமாக ஏம்பலம் செல்வம் போட்டியின்றி சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.
தேர்தலுக்குப் பிறகு புதுச்சேரி சட்டசபை இன்று கூடுகிறது. தற்போது தற்காலிக சபாநாயகராக உள்ள லட்சுமி நாராயணன், ஏம்பலம் செல்வம் புதிய சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டது குறித்த அறிவிப்பை வெளியிடுவார்
புதுச்சேரியில் அரசியல் வரலாற்றிலேயே பாஜகவைச் சேர்ந்த ஒருவர் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.












Click it and Unblock the Notifications