இந்து தெய்வங்கள் அவமதிப்பு.. திருமாவளவன் மீது 4 பிரிவுகளில் வழக்கு!
புதுச்சேரி: இந்து கோவில்களை அவமதித்து பேசிய புகாரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் மத அவமதிப்பு உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி கம்பன் கலையரங்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி சார்பில் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் இந்து தெய்வங்களைப்பற்றி சில கருத்துகளை தெரிவித்தார்.
திருமாவளவனின் கருத்து இந்து கோவில்களையும், தெய்வங்களையும் அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும், இந்து மத உணர்வை புண்படுத்துவதுவதாகவும் கூறி, திருமாவளவனுக்கு எதிராக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்து தெய்வங்களை அவமதித்து பேசிய திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, இந்து முன்னணியின் பொதுச்செயலாளர் கண்ணன் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்நிலையில் திருமாவளவன் பேசிய இடம் புதுச்சேரி மாநிலம் என்பதால், பெரம்பலூர் போலீசார் இந்த வழக்கை தமிழக டிஜிபி மூலமாக புதுச்சேரி மாநில காவல்துறைக்கு மாற்றியுள்ளனர். இதனையடுத்து புதுச்சேரி போலீசார் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர், தற்போது திருமாவளவன் மீது ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில் மத அவமதிப்பு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஆதாரங்களை திரட்டும் பணியில் ஒதியஞ்சாலை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருமாவளவன் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.