சினிமா தியேட்டர் ஊழியர் மீது தாக்குதல்... சிசிடிவி காட்சிகள் வெளியாகி புதுச்சேரியில் பரபரப்பு!
புதுச்சேரி : புதுச்சேரியில் திரையரங்கு ஊழியரை அவரது நண்பர்கள் கத்தியால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழியரை தாக்கிய இரண்டு பேரை, சம்பவ இடத்திலயே போலிசார் கைது செய்தனர்.
Recommended Video
புதுச்சேரி திருவள்ளுவர் சாலையில் சண்முகாஸ் திரையரங்கம் அமைந்துள்ளது. இந்த திரையரங்கில், திலாஸ்பேட்டையை சேர்ந்த ரஞ்சித் என்பவர் கேண்டீன் பொறுப்பாளராக பணி புரிந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, பணியில் இருந்த ரஞ்சித்தை, திலாஸ்பேட்டை கருணாஜோதி வீதியை சேர்ந்த முகேஷ் கண்ணன் மற்றும் சுரேந்தர் ஆகியோர் ஃபோன் செய்து சினிமா தியேட்டர் வாசலுக்கு வருமாறு அழைத்தனர். அதன்படி ரஞ்சித் தியேட்டர் வாசலுக்கு வந்தபோது, இருவரும் ரஞ்சித்தை தாக்க முயன்றார். மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ரஞ்சித்தை வெட்ட முயன்றபோது, ரஞ்சித் தடுத்ததால் அவரது வலது கையில் வெட்டு விழுந்தது. இதனால் வலியால் ரஞ்சித் அலறியதால் திரையரங்கில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் திரண்டனர். இதனையடுத்து, முகேஷ் கண்ணனும், சுரேந்தரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலிசார், தாக்குதலில் ஈடுப்பட்ட இரண்டு பேரையும் மடக்கிப் பிடித்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரஞ்சித்தின் நண்பர்களான இவர்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு திருட்டு வழக்கில் சிறை சென்று வந்ததாகவும், இதனை அவ்வப்போது ரஞ்சித் தங்களது வீட்டருகே இருப்பவர்களிடம் திருட்டு வழக்கில் சிறை சென்றவர்கள் என கிண்டல் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த சுரேந்தர், முகேஷ் கண்ணன், தன்னை கேலி கிண்டல் செய்த ரஞ்சித்துக்கு பாடம் புகட்டம் திட்டமிட்டனர். அதன்படி, ரஞ்சித் பணி புரியும் திரையரங்கிற்கு வந்தனர். ரஞ்சித் அருகே வந்தபோது, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை தாக்கியதாக போலீஸ் தரப்பில் நடத்தப்பட்ட விசாரணணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலிசார், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, திரையரங்கு இயங்கும் நேரத்தில் இரண்டு வாலிபர்கள் திரையரங்கு ஊழியரை கத்தியால் தாக்கியும், விரட்டி விரட்டி அடிக்கும் காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுது. தற்போது இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.