நான் ஆட்சிக்கு வந்தால்! பெண்களுக்கு மாதம் ரூ 4000, இலவச LPG! மார்டின் மகன் சார்லஸ் வாக்குறுதி!
புதுவை: புதுவைக்கு எனது பாக்கெட்டில் இருந்து ரூ 100 கோடி செலவிடத் தயாராக இருப்பதாகவும் பெண்களுக்கு மாதம் ரூ.4000, 6 இலவச சிலிண்டர் வழங்கப்படும் என லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும் மார்ட்டினின் மகனுமான சார்லஸ் மார்ட்டின் அறிவித்துள்ளார்.
2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால், மாநில வளர்ச்சிக்காக தனது சொந்த நிதியில் இருந்து ₹100 கோடியைச் செலவிடுவேன் என்று தவெக தேர்தல் பிரச்சார பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனர் சார்லஸ் மார்ட்டின், உறுதி அளித்துள்ளார்.

புதுச்சேரியில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரவிருக்கும் நிலையில், சார்லஸ் மார்ட்டின் பல புதிய தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். குறிப்பாக, பெண்கள் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட ஆறு முக்கிய நலத்திட்டங்களை அவர் அறிவித்துள்ளார்.
நிதி உதவி
பெண்களுக்கு நேரடியாக நிதி உதவி வழங்குவது பற்றி சார்லஸ் மார்ட்டின் பேசினார். அவர், "அரசு மாதம் தோறும் ₹2,000 தருவதாகச் சொன்னாலும், கடந்த மூன்று மாதங்களாக ஒரு பைசா கூட கொடுக்கப்படவில்லை என்பது எனக்குத் தெரியும். அதனால், இந்தத் தொகையை மாதத்திற்கு ₹4,000 ஆகவும், ஒரு வருடத்திற்கு ₹50,000 ஆகவும் உயர்த்த நான் திட்டமிட்டுள்ளேன்" என்றார்.
1 லட்சம்
இத்துடன், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பப் பெண்களுக்கு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ₹1 லட்சம் பணமும், 10 கிராம் தங்கமும் வழங்கப்படும் என்று மார்ட்டின் அறிவித்தார். மேலும், ஆண்டுக்கு ஆறு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.
கர்ப்பிணிகள் நலன்
கர்ப்பிணிகளின் நலன் குறித்தும் மார்ட்டின் பேசினார். "கர்ப்பிணிப் பெண்களுக்கு ₹35,000 நிதி உதவியும், குழந்தைகளின் நல்ல வளர்ச்சிக்கு ஒரு சுகாதாரப் பெட்டியும் வழங்கப்படும்" என்று அவர் உறுதியளித்தார். ஆதரவற்ற மற்றும் திருமணம் ஆகாத பெண்களுக்கு ஆண்டுக்கு ₹60,000 வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
பெண்கள் முன்னேற்றம்
பெண்கள் முன்னேற்றத்தில் கல்வியின் முக்கியத்துவத்தை சார்லஸ் மார்ட்டின் வலியுறுத்தினார். "தாய்மார்களுக்கான கல்வி நிதியை நாங்கள் உருவாக்குவோம். குழந்தைகளின் கல்வி மிக அவசியம். அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதோடு, குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு ₹20,000 நிதி உதவி வழங்கப்படும் என நான் உறுதியளிக்கிறேன்" என்று தெரிவித்தார்.
நிர்வாக பதவிகள்
அரசியல் மற்றும் நிர்வாகப் பதவிகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் திட்டங்களை மார்ட்டின் வெளியிட்டார். அவர், "புதுச்சேரியில் தற்போது ஒரே ஒரு பெண் பிரதிநிதிதான் இருக்கிறார். எங்கள் கட்சியில், பெண்களுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்படும். உள்ளாட்சித் தேர்தல்களிலும், அரசு வேலைவாய்ப்புகளிலும் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படும்" என்று உறுதியளித்தார்.
மார்ட்டின் மகன் சொன்னது என்ன
தான் அறிவித்த இந்தத் திட்டங்கள் சாத்தியமானவை என்று சார்லஸ் மார்ட்டின் திட்டவட்டமாகத் தெரிவித்தார். "நான் கூறியுள்ள ஆறு திட்டங்களும் நிச்சயம் செயல்படுத்தக்கூடியவை. என் சகோதரி, மகள், மருமகளுக்கு நான் என்ன செய்ய வேண்டுமோ, அதையே மனதில் வைத்து இந்தத் திட்டங்களை உருவாக்கியுள்ளேன். மக்கள் எங்களை ஆட்சிக்குக் கொண்டு வருவார்கள், நாங்கள் எங்கள் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்" என்றார்.
புதுவை மக்கள்தொகை
சார்லஸ் மார்ட்டின் அளித்த தகவலின்படி, புதுச்சேரியின் மொத்த மக்கள் தொகை 12.5 லட்சம். இதில் 50.9% பேர் பெண்கள். இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ₹1,500 கோடி செலவாகும் என்று அவர் கணக்கு போட்டுள்ளார். மேலும் இந்த நிதியை தன்னால் திரட்ட முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications