விரைவில் விடிவுகாலம் வரும்.. நாராயணசாமி தாக்கு.. பொய் பேசுவதே வேலை.. கிரண் பேடி பதிலடி!
புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் கிண்பேடியின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு விடுவுகாலம் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதனிடையே முதலமைச்சர் நாராயணசாமிக்கு பொய் கூறுவதே வழக்கம் என கிரண்பேடி பதிலுக்கு வசைபாடியுள்ளார்.
சட்டப்பேரவையில் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, இந்தியாவில் எந்த மாநிலத்திலேயும் தொடர்ந்து 15 நாட்கள் புதிய கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்ற நிலையை புதுச்சேரி மாநிலத்தில் நாம் உருவாக்கி இருக்கிறோம். சுகாதாரத்துறை, காவல்துறையினர் இரவு, பகலாக பாடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமென மருத்துவத்துறை தலைமை அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளேன்.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து எங்கள் அரசுக்கு தொல்லை கொடுப்பது மட்டுமல்லாமல், அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார். புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றை தடுத்து நிறுத்துவதற்கு எங்கள் அரசு சார்பில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து அதில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் இந்நேரத்தில் அரசுக்கு கலங்கம் விளைவிக்க வேண்டும் என்பதற்காக அவர் பல வழிகளில் முயற்சி செய்து வருகிறார்.
அதன் முதற்கட்டமாகத்தான் கிரண்பேடி அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவுகளை கொடுத்து, அதிகாரிகளையும் தேவையின்றி நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் அளவில் மாற்றி அவர்களுக்கு சங்கடத்தை உருவாக்கி வருகிறார். இதனால் அதிகாரிகள் மன உளைச்சலுடன் செயல்படுகின்றனர். கீழ் நிலை அதிகாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காவலர்துறை அதிகாரிகள் இரவு பகலாக பணியாற்றுகின்றனர். ஆனால் ஒருசிலர் அவர்களை வசைப்பாடுவதும், குற்றச்சாட்டு கூறுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. ஆகவே அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளேன். அதேபோல் குடிமைப்பொருள் துறை, கலால்துறை போன்ற பல துறைகளில் உள்ள அதிகாரிகள் கிரண்பேடியின் அராஜகப்போக்கினால், சட்டவிரோத போக்கினால், அதிகார துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் விடுவுகாலம் கொண்டுவர நான் நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
அரசின் அன்றாட செயல்பாடுகளில் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது, அரசு நிர்வாகத்தை முதல்வர், அமைச்சர்கள் நடத்துவார்கள் என்று தெள்ளத்தெளிவாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இருந்தும், துணைநிலை ஆளுநரின் நடவடிக்கைகள் நீதிமன்றத்தை அவமதிக்கின்ற வகையில் இருக்கிறது. அதற்காக மேல் நடவடிக்கை என்ன செய்வது என்பதை சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்க இருக்கிறோம் என தெரிவித்தார்.

இதனிடையே புதுச்சேரியில் கொரோனா நிவாரண பணிகளுக்காக ரூபாய் 995 கோடி கேட்டும், மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதி கொடுக்கவில்லை. ஆனால், மற்ற மாநிலங்களுக்கு நிதி கொடுத்துள்ளது என முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டி இருந்தார். இந்நிலையில், தற்போது உள்ள சூழலை தவிர்த்து மத்திய அரசு புதுச்சேரிக்கு என்ன திட்டங்களை செயல்படுகிறது என்ற பட்டியலை ஆளுநர் கிரண்பேடி வெளியிட்டுள்ளார். அதில், முதல்வர் தவறான தகவல்களை தொடர்ந்து கூறி வருகிறார். மத்திய அரசு உதவி செய்யவில்லை என கூறுவது பொய்யான தகவல். பிரதான் மந்திரி ஜன்தன் யோஜானா திட்டத்தின் கீழ் 83 ஆயிரம் பேருக்கு தலா ரூபாய் 500 வீதம் ரூபாய் 4.15 கோடி போடப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி கிஷான் சமான் திட்டத்தின் கீழ் 9,299 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.1.85 கோடி போடப்பட்டுள்ளது. மேலும் இதே திட்டத்தின் கீழ் 913 விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் 6.5 லட்சம் ஏழைகளுக்கு 3 மாதங்களுக்கு அரிசி தருவதற்காக 9,425 மெட்ரிக் டன் அரிசியை மத்திய அரசு புதுவைக்கு அனுப்பியுள்ளது. இதுவரை 6 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டது. அரிசி வழங்கும் பணி 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
ஏழை முதியோர்கள், விதவைகள், ஊனமுற்றோருக்கு தலா ரூ.ஆயிரம் வீதம் ரூ.1.43 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. கிராமப்புற ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தினக்கூலியை ரூ.229ஆக இருந்ததை ரூ.259 ஆக உயர்த்தியுள்ளது. இந்த திட்டத்துக்கு ரூ.2.16 கோடியை மத்திய செலவிடுகிறது. கட்டுமான தொழிலாளர் நலவாரியத்துக்கு ரூ.7.22 கோடியை அளித்துள்ளது. 13,526 ஏழை குடும்பங்களுக்கு உஜ்வால திட்டப்படி 3 மாதங்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு வாங்குவதற்கு ரூ.80.75 லட்சத்தை பயனாளிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசு செலுத்தியுள்ளது.
புதுச்சேரிக்கான ஆண்டு நிதி ஒதுக்கீட்டாக மத்திய அரசிடம் ரூ.424.5 கோடி நிதி பெறப்பட்டுள்ளது.
இதுபோல் நலவாழ்வு திட்டங்களுக்காகவும் மத்திய அரசிடமிருந்து நிதி பெற்றுள்ளனர். இவை அனைத்தும் சத்தமில்லாமல் பயனாளிகளுக்கு நேரடியாக சென்றடைந்துள்ளது. இலவச அரிசி விநியோகத்தில் தாமதம் இல்லை. தற்போது இலவச அரிசி விநியோகம் வீடு வீடாக சென்று வழங்கப்படுகிறது. ஏற்கனவே ரேஷன் கடை மூலம் அரிசி விநியோகம் செய்யப்பட்டபோது, 3 முதல் 4 வார காலம் ஆனது. தற்போதைய சூழலில் வீட்டிற்கு சென்று அரிசி கொடுக்கப்படுகிறது. அதற்கு பிறகு, வங்கி கணக்கில் பணம் செலுத்தும் முறை நடைமுறையில் இருக்கும். ரேஷன் கடைகளுக்கு தேவை இருக்காது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications