தமிழகத்தில் 1000 ரூபாய்.. புதுவையில் வெறும் 170 ரூபாதானா.. சாமி சார் ஏன் இப்படி?!
புதுச்சேரி: புதுச்சேரியில் பொங்கல் பண்டிகைக்கு அரிசி, வெள்ளம், முந்திரி உள்ளிட்ட பொருட்களை வாங்க அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 170 வங்கி கணக்கில் செலுத்தப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதனால் புதுச்சேரி மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இலவசம், சலுகை என்றாலே புதுச்சேரி மாநிலம் தான் என்ற பெருமை ஒரு காலத்தில் இருந்தது. உயர்கல்வி கட்டணம், மழை நிவாரணம், கல்வி உதவித்தொகை, ரேஷனில் இலவச பொருட்கள், முதியோர் உதவித்தொகை, விதவை பென்ஷன் என அனைத்திலும் அள்ளிக்கொடுக்கும் மாநிலமாக புதுச்சேரி இருந்து வந்தது. இதனால் புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக பகுதி மக்கள், புதுச்சேரியில் குடியேறுவதை லட்சியமாக கொண்டிருந்தனர். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

மத்தியில் பாஜக அரசு இருப்பதால், புதுச்சேரியில் மாநிலத்தில் காங்கிரஸ் அரசுக்கு போதுமான நிதியை ஒதுக்குவதில்லை. இதனால் மாநிலத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையான நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மேலும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் - முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே உள்ள அதிகார மோதலால் சிறிய திட்டங்களை கூட புதுச்சேரி மாநிலத்தில் செயல்படுத்துவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. தற்போது புதுச்சேரியை காட்டிலும், தமிழகத்தில் அதிக சலுகைகள் கிடைப்பதால், புதுச்சேரியை விட்டு பலர் அண்டை மாநிலமான தமிழகத்திற்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.

தற்போது கூடபொங்கல் பண்டிகைக்கு தமிழகத்தில் அரிசி, வெள்ளம், முந்திரி உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது. இதனை புதுச்சேரி எல்லைப்பகுதியில் உள்ள தமிழக மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இவற்றை, நமக்கும் இதுபோன்று கிடைக்காதா? என ஏக்கத்துடன் புதுச்சேரி மக்கள் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் பொங்கலுக்கு ரூபாய் 170 வழங்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மக்கள் மகிழ்ச்சியாக பொங்கல் பண்டிகையை கொண்டாட, பொங்கல் வைக்க தேவையான அரிசி, வெள்ளம், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை வாங்க அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 170 அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு, மக்கள் நலத்திட்டங்களை தடுத்து வருவதாகவும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மத்திய உள்துறை அமைச்சகமும், கிரண்பேடியும் மதிப்பதில்லை. புதுச்சேரி மாநிலத்தில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசுக்கு இரட்டை நிலைபாடு உள்ளது.

இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் புதுச்சேரி அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. மாநில உள்ளாட்சி தேர்தல் ஆணையரை நியமிக்க மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது. ஆனால் தேர்தல் ஆணையரை நியமிக்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு யார் அதிகாரம் கொடுத்தது என கேள்வி எழுப்பினார். மேலும் ஆளும் காங்கிரஸ் அரசை பற்றியும், தன்மீதும் குற்றம் சுமத்தியுள்ள, காங்கிரஸ் கட்சியின் பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனவேலு மீது கட்சி தலைமையிடம் புகார் அளித்துள்ளதாகவும், கட்சி தலைமை அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என்றார்.
முதலமைச்சரின் அறிவிப்பு மூலம், பொங்கலுக்கு தமிழகத்தை போன்று, பரிசு பொருட்களும், ஆயிரம் ரூபாய் பணமும் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த புதுச்சேரி மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.












Click it and Unblock the Notifications