பேனர் மீது பேனர் வைத்ததால் மோதல்.. காங்கிரஸ் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கிய தவெகவினர்.. சிசிடிவி
புதுவை: புதுவையில் போஸ்டர், பேனர் ஒட்டிய விவகாரத்தில் காங்கிரஸ் நிர்வாகியை வீடு புகுந்து தவெகவினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெகவினர் 9 பேர் காங்கிரஸ் நிர்வாகியின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமரா, பூந்தொட்டிகளை அடித்து உடைத்ததாகவும், அவரது மனைவி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தமிழக திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். வரும் 2026 சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு என்று அறிவித்து இருக்கும் விஜய், தனது கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழகம் மட்டும் இன்றி புதுவையில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது..

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம், வட்டம், ஒன்றியம் என கட்சியின் பல்வேறு நிலைகளிலும் நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கான பணிகளில் விஜய் ஈடுபட்டுள்ளார். வரும் ஜனவரி மாதத்திற்கு பிறகு விஜய் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, சில இடங்களில் தவெக மற்றும் பிற நிர்வாகிகள் இடையே மோதல்களும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், புதுவையில் போஸ்டர், பேனர் ஒட்டிய விவகாரத்தில் காங்கிரஸ் நிர்வாகியை வீடு புகுந்து தவெகவினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுவையில் உள்ள பூமியான்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவபெருமாள் (வயது 47). இவரது மூத்த மகன் சிவப்பிரகாஷ் காங்கிரஸ் கட்சியில் மாணவர் பிரிவில் பொறுப்பில் இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது பிறந்தநாளையொட்டி வாழ்த்து பேனர் வைத்து இருக்கிறார்.

அதே பகுதியை சேர்ந்த முரளி என்பவர் அந்த பேனரை கிழித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் முரளியை காவல் நிலையத்திற்கு அழைத்து எச்சரித்து அனுப்பினர். இந்த நிலையில், இந்த பேனர் தகராறு தொடர்பாக நேற்று காலை, தவெக நிர்வாகி அருள்பாண்டி, சாரங்கபாணி, அருள்குமார், சஞ்சய், ரவி, சர்வின், விஜய பாரதி, கணேஷ், முரளி ஆகிய 9 பேர் கொண்ட கும்பல் திடீரென வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமரா, பூந்தொட்டிகளை அடித்து உடைத்தனர்.
சத்தம் கேட்டு வெளியே வந்த சிவபெருமாள், அவரது மனைவி வானதியை அந்த கும்பல் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த சிவபெருமாள், மனைவி வானதி, மகன்கள் சிவப்பிரகாஷ், சூரிய பிரகாஷ் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த மோதல் குறித்த புகாரின்பேரில் ரெட்டியார்பாளையம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 9 பேரையும் தேடி வருகிறார்கள். பேனர் வைக்கும் தகராறில் தவெக நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













Click it and Unblock the Notifications