நூறு ரூபாய்க்காக உயிரை பணயம் வைத்த கூலித் தொழிலாளி.. தொடரும் சாக்கடை அவலம்.. புதுவையில் கொடுமை
புதுச்சேரி: ஆபத்தை உணராமல் உயிரை பணயம் வைத்து நூறு ரூபாய் காசுக்காக கூலி தொழிலாளி ஒருவர் பாதாள சாக்கடையில் மூழ்கி அடைப்புகளை சுத்தம் செய்யும் அவல நிலை புதுச்சேரியில் அரங்கேறியுள்ளது.
மனித மலத்தை மனிதனே அள்ளுவது சட்டப்படி தடை செய்யப்பட்டும், அத்தகைய தொழிலில் ஒருவரை ஈடுபடுத்துவது குற்றம் என்றாலும், நாள்தோறும் கழிவுநீர் தொட்டியிலும், பாதாள சாக்கடைகளிலும், மலக்குழிகளிலும் இறங்கி சுத்தம் செய்யும்போது இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.
இந்த நிலையில் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அடைப்புகளை எடுக்க அப்பாவி கூலி தொழிலாளிகளை நேரடியாக பாதாள சாக்கடைக்குள் இறக்கி சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் புதுச்சேரி அரசு அதிகாரிகள்.

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு
அப்படியொரு சம்பவம்தான் வீட்டு வசதி வாரிய அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் தற்போது நடைபெற்றுள்ளது. அரசு ஊழியர்கள் 20 க்கும்
மேற்பட்டோர் சூழ்ந்துகொண்டு ஒரு கூலி தொழிலாளியை பாதாள சாக்கடைக்குள் இறக்குகின்றனர். அந்த கூலி தொழிலாளியும், ஆபத்தை உணராமல் நூறு ரூபாய் காசுக்காக எந்தவித பாதுகாப்புமின்றி வெறும் உடம்புடன் சாக்கடை நீருக்குள் முக்கி எழுந்து அடைப்புகளை சுத்தம் செய்கிறார்.

சட்ட விரோதம்
மேலும் சரியாக சுத்தம் செய்யுமாறு அந்த கூலி தொழிலாளிக்கு கட்டளையும் இடுகின்றனர் அரசு ஊழியர்கள். பாதாள சாக்கடைக்குள் மனிதர்களை இறக்கி சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம் என தெரிந்தும், அரசு ஊழியர்களின் இந்த செயல் மிகுந்த கண்டனத்துக்குரியது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம்
புதுச்சேரி மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வாகி, ரூபாய் 1,800 கோடி மதிப்பீட்டில் அதற்கான பணிகள் நகர் முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், பாதாள சாக்கடைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சுத்தம் செய்வதற்கு ஒரு இயந்திரம் கூட அரசிடம் இல்லாதது, அரசின் இயலாமையையே காட்டுகிறது.

இதற்கு ஒரு இயந்திரம் இல்லையா
சந்திரனுக்கு ராக்கெட்டை அனுப்பும் நாம், பாதாள சாக்கடைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சுத்தம் செய்வது, உள்ளிட்ட ஆபத்தான வேலைகளை செய்வதற்கு ஒரு சரியான இயந்திரத்தை இதுவரை கண்டுபிடிக்காதது வேதனைக்குரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications