ஆளுநர் கிரண்பேடியின் ஆட்டம் 3 மாதத்தில் முடிவுக்கு வரும்... நாராயணசாமி காட்டம்
புதுச்சேரி: ஆளுநர் கிரண்பேடி திரைப்பட நடிகரா என முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி உள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட் 2030 வரை 11 ஆண்டுகளுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் திட்டங்கள் பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
திட்டத்திற்கான நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கு எந்தவொரு அம்சமும் இடைக்கால பட்ஜெட்டில் இல்லை. பட்ஜெட் மூலம் மக்களை என்னதான் திசை திருப்ப நினைத்தாலும், 2019 பாராளுமன்தேர்தலில் பாஜக படுதோல்வியடையும் என தெரிவித்த முதலமைச்சர் நாராயணசாமி, இடைக்கால பட்ஜெட் முழுவதுமாக விதிமுறைகளை மீறிய பட்ஜெட் என்றார்.

மோடி தயாரா?
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் மக்களை ஏமாற்றும் பட்ஜெட். விவசாயிகள் மீது உண்மையான அக்கரை இருந்தால் விவசாயக்கடனை தள்ளுபடி செய்ய மோடி தயாரா எனவும் முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

வாக்குகாக ரூ.6 ஆயிரம்
தொடர்ந்து பேசிய அவர், தேர்தலை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவதென்பது விவசாயிகளை திசை திருப்பவும், அவர்களின் வாக்குகளை நம்பி கொடுக்கப்படும் தொகை என்று கூறிய அவர், இது ஒன்றும் புதிய திட்டம் அல்ல, புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் வழங்கப்படுகின்றது என்று குறிப்பிட்டார்.

விவசாயிகள் மீது கரிசனம்
மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்தனர். அப்போது அவர்களை சென்று சந்திக்காத பிரதமர், தமிழக விவசாயிகள் டெல்லி சென்று போராடியபோதெல்லாம் வராத கரிசனம் இப்போது வந்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

கிரண்பேடி குறித்து விமர்சனம்
ஆய்வுக்கு செல்லும் ஆளுநர் கிரண்பேடி திரைப்பட நடிகர் போன்று பலவித கேமராக்கள் எடுத்துக்கொண்டு திரைப்படம் எடுப்பது போல் நடித்துக் கொண்டு, ஆளுநர் பதவியை அசிங்கப்படுத்துவதாக குற்றச்சாட்டினார். மேலும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கிரண்பேடி தன்னை மாற்றவில்லை. நானும் என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்த அவர், கிரண்பேடியின் ஆட்டம் இன்னும் மூன்று மாதத்தில் முடிவுக்கு வரும் என்றார்.












Click it and Unblock the Notifications