காங்கிரஸ் மாஸ்.. சிஏஏவுக்கு எதிராக மெகா பேரணி.. குலுங்கிய புதுச்சேரி.. முழங்கிய நாராயணசாமி!
புதுச்சேரி: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற பேரணியில் முதலமைச்சர் நாராயணசாமி உட்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, கையில் தேசிய கொடி ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை ரத்து செய்யக்கோரி, புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான திமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது.
புதுச்சேரி சுதேசி மில் திடலில் தொடங்கிய பேரணி அண்ணாசாலை, நேருவீதி, மிஷன்வீதி வழியாக சென்றது. பேரணியில் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம், கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய்தத் மற்றும் அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்பட 3000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கையில் தேசிய கொடி ஏந்தியவாறு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்றனர்.

கடும் போக்குவரத்து பாதிப்பு
இறுதியாக தலைமை தபால் நிலையம் எதிரே பேரணி நிறைவடைந்ததும், மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியின் போராட்டம் காரணமாக நகரப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆட்சியே கலைந்தாலும்
ஏற்கனவே தனது ஆட்சியே கலைந்தாலும் புதுச்சேரியில் குடியுரிமை திருத்த சட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

பந்த் தள்ளி வைப்பு
மேலும் நாளைய தினம் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் புதுச்சேரி முழுவதும் பந்த் போராட்டம் நடத்துவதற்கு காங்கிரஸ் கட்சி திட்டமிட்டிருந்த நிலையில், வணிகர்களின் கோரிக்கையை ஏற்று பந்த் போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைத்துள்ளனர்.

நாம் தமிழர் மட்டும் பந்த்
எனினும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை புதுச்சேரியில் பந்த் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

கலவரம் ஏற்படுத்த முயற்சி
பேரணியின் நிறைவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, எல்லா மதத்திற்கும் சமமான நாடு இந்தியா. இந்தியாவில் இனக்கலவரம், மதக்கலவரத்தை மத்திய பாஜக அரசு உருவாக்கியுள்ளது. இந்தியாவில் 14 மாநில முதல்வர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்ற விட மாட்டோம் என்கின்றனர்.

பிணத்தின் மீது ஏறி நின்றாலும்
புதுச்சேரியில் எக்காரணம் கொண்டும் இச்சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம். எங்கள் பிணத்தின் மீது ஏறி நின்றாலும் இச்சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் எனக்கூறியுள்ளேன். புதுச்சேரி மாநிலம் ஒரு அமைதி பூங்கா.

தியாகம் செய்வோம்
எல்லோருக்கும் ஒரே சட்டம் என பொது சிவில் சட்டத்தை கொண்டுவந்து நாட்டில் இரத்த கலவரத்தை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது. புதுவை மக்களுக்காக எதை இழந்தாலும், தியாகம் செய்யவும் தயாராக உள்ளோம் என முதலமைச்சர் நாராயணசாமி பேசினார்.












Click it and Unblock the Notifications