"ரூ.900 கோடி.!" குப்பை டெண்டரில் கூட மெகா ஊழல்.. முதல்வர் விசாரணைக்கு தயாரா! நாராயணசாமி பரபர அட்டாக்
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளும் என்ஆர் காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் முதல்வர் நாராயணசாமி, குப்பை அள்ளும் டெண்டரிலும் ஊழல் நடந்துள்ளதாகச் சாடியுள்ளார்.
புதுச்சேரி இப்போது என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி அரசு நடந்து வருகிறது. அங்கு இப்போது என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராக உள்ளார்.
இதற்கிடையே இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸின் நாராயணசாமி, புதுச்சேரி அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன்வைத்தார்.

நாராயணசாமி
இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, "காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது மன்மோகன் சிங்க பிரதமராக இருந்தபோது, காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தைத் தாண்டியது.. ஆனால் இன்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள கணக்கின்படி நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.9 சதவீதமாக உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. உண்மை இப்படி இருக்கப் பிரதமர் நரேந்திர மோடி இன்னும் தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார். பிரதமர் மோடியும் பாஜகவும் கடன்களை எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் தந்ததால், இப்போது வங்கிகளுக்கு 10 லட்சத்து 40 ஆயிரம் கோடி வாராக்கடன் ஏற்பட்டுள்ளது.

நஷ்டம்
இதை பாஜகவும், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாரமனும் தான் ஏற்க வேண்டும்.. மேலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டுக் கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நாங்கள் குரல் கொடுத்தபோது வாய்மூடி மவுனமாக இருந்தவர் தான் ரங்கசாமி.. இப்போது மாநில அந்தஸ்து வேண்டும் என்று கேட்கின்றார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்ற எண்ணம் ரங்கசாமிக்கு உண்மையாக இருந்தால் 3 மாதத்திற்குள் மாநில அந்தஸ்து கொடுக்காவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறுவேன் எனக் கூற ரங்கசாமிக்குத் தைரியம் இருக்கிறதா?

ரங்கசாமி
அவரது அலட்சியமான செயல்பாட்டால் புதுச்சேரி நிர்வாகமே ஸ்தம்பித்துள்ளது.. அதை மறைக்க மாநில அந்தஸ்து வேண்டும் என்று ரங்கசாமி நாடகமாடுகிறார்.. ரங்கசாமியை மிரட்டி பாஜக தான் இப்போது புதுச்சேரியின் ஒட்டுமொத்த நிர்வாகத்தை நடத்தி வருகின்றார்கள்.. இதனால் எந்தவொரு கோரிக்கையையும் மத்திய அரசிடம் தைரியமாகக் கேட்க முதல்வர் ரங்கசாமிக்கு தெம்பு இல்லை.. மோடி அரசுக்கு அடிமையாக ரங்கசாமி செயல்படுகின்றார்.. பள்ளிகள் திறந்து பல மாதங்கள் ஆகியும் கூட இதுவரை சீருடை, பாட புத்தகங்கள் வழங்கவில்லை..

900 கோடி முறைகேடு
மாணவர்களுக்கான இலவச பேருந்துகளும் நிறுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் புதுச்சேரி கல்வித்துறை சீரழிந்துள்ளது. கல்வித்துறையைப் புதுச்சேரி அரசு முற்றிலுமாக புறக்கணிக்கிறது. எல்லாவற்றையும் விடப் புதுச்சேரியில் குப்பை அள்ள 19 ஆண்டுகளுக்கு டெண்டர் போடப்பட்டு உள்ளது. அந்த ரூ.900 கோடி டெண்டரில் பல முறைகேடுகள் நடந்துள்ளது.. இந்த துறை சார்ந்த அமைச்சர் சாய் சரவணன் தனக்கே தெரியாமல் இந்த கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

குப்பை டெண்டர்
துறை அமைச்சர், நிதி செயலர், ஆளுநர் உள்ளிட்டோர் கையெழுத்திடாமல் இந்த டெண்டர் எப்படி விட முடியும் என துறை அமைச்சர் பாஜகவின் சாய் சரவணன் குமார் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து தலைமைச் செயலருக்கும் அவர் கடிதம் எழுதி இருக்கிறார். மேலும், டெண்டர் தொடர்பான கோப்புகளை தனக்கு அனுப்பி வைக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். இதில் இருந்தே அதில் முறைகேடு நடந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. ஆகவே இந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும் எனத் தலைமைச் செயலாளருக்கு அவர் கடிதமும் எழுதி உள்ளார்.

மெகா ஊழல்
ரங்கசாமி தலைமையிலான அரசின் மிகப்பெரிய ஊழல்களில் இதுவும் ஒன்று. இந்த ஊழல் தொடர்பாக முதல்வர் ரங்கசாமி நீதி விசாரணைக்குத் தாயாரா .. புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் ஊழல் இல்லை என பாஜக கூற முடியுமா? ரங்கசாமி அரசின் மீது பாஜக அமைச்சர் ஊழல் புகார் கூறுவதைப் புதுச்சேரி பாஜக தலைமை என்ன செய்யப் போகின்றது" என்று அவர் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார்.












Click it and Unblock the Notifications