ஆளுநர்கள் பாஜகவின் ஒற்றர்களாக செயல்படுகின்றனர் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் பகீர் புகார்
புதுச்சேரி : பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் பாஜகவின் ஒற்றர்களாக செயல்படுவதாகவும், குடியரசு தின விழாவில் தமிழகத்தின் அலங்கார ஊர்திகளை அனுமதிக்காதது, நாட்டின் விடுதலை வரலாற்றை அழிக்கும் முயற்சி என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.
Recommended Video
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலாளர் முத்தரசன், புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அரசு தேர்தலில் அறிவித்தது மக்கள் நலத்திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை எனவும், புதுச்சேரியில் துணை ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையே போட்டி அரசாங்கம் நடைபெற்று வருகிறது என்றார்.
புதுச்சேரியில் நடக்கும் நிகழ்வு, ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல எனக் கூறிய அவர், இந்தியாவில் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் தங்களின் வரம்புக்குள் செயல்படாமல், மத்தியில் ஆளும் பாஜகவின் ஒற்றர்களாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
மேலும் டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவிற்கான அலங்கார ஊர்திகளை தேர்வு செய்யும் குழு வரலாறு தெரியாத பூஜ்ய குழு எனவும், தமிழகத்தின் அலங்கார ஊர்திகளை அனுமதிக்காதது, நாட்டின் விடுதலை வரலாற்றை அழிக்கும் முயற்சி என குற்றம் சாட்டினார். மேலும் டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தினவிழாவில் தமிழகத்தின் அலங்கார ஊர்திகளை அனுமதிக்காத பாஜகவை கண்டித்து மாநில தலைமை அலுவலகத்தில் நல்லகண்ணு தலைமையில் மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
கோவா தேர்தல்: கேட்டது கிடைக்கவில்லை.. பாஜகவிலிருந்து விலகினார் மனோகர் பாரிக்கரின் மகன்!