புதுச்சேரியில் 8 நாட்களுக்கு ஸ்டாக் வைத்த மதுப்பிரியர்கள்.. கடைகளில் அலைமோதிய கூட்டம்
புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அடுத்த 8 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்க மதுபானக் கடைகளில் மதுப்பிரியர்கள் முற்றுகையிட்டு மதுபானங்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சென்றனர்.
Recommended Video

உலகையே அச்சுறுத்தி வரும் கோரோனா வைரசின் காரணமாக மனித சமுதாயம் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. கைகளை அடிக்கடி கழுவுதல், முக கவசம் அணிதல், நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளித்தல், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மக்கள் கூட்டமாக கூடுவதைத் தவிர்த்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க புதுச்சேரி மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், புதுச்சேரி மாநிலத்தில் இன்று இரவு 9 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தங்களை தனிமைப்படுத்துவதில் அலட்சியமாக இருப்பதால், ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவினால் மதுப்பானக் கடைகளும் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்பதால், மதுவுக்கு பெயர்ப்போன புதுச்சேரியில் அடுத்த 8 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கி ஸ்டாக் வைத்து கொள்வதற்காக, மதுப்பிரியர்கள் ஒரே நேரத்தில் மதுபானக் கடைகளில் குவிந்தனர். இதனால் மறைமலையடிகள் சாலை, அண்ணா சாலை, புஸ்ஸி வீதி உள்ளிட்ட நகரின் மையப்பகுதி மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள மதுபானக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. ஒருசில கடைகளில் போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை நடைபெற்றது.

இதனிடையே சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் கொரோனா நோய் தாக்கத்தை கட்டுபடுத்துவதற்காக மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக முதலமைச்சர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்காக அளிக்க உள்ளோம். அரசு ஊழியர்களும் தங்களுடைய ஒருநாள் ஊதியத்தை வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களும் தங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.













Click it and Unblock the Notifications