கிரண் பேடிக்கு எதிராக புதுச்சேரியில் கொந்தளித்த திமுக.. நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
Recommended Video
புதுச்சேரி: தமிழக மக்களை இழிவாக பேசிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து புதுச்சேரியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநர் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுகவின் போராட்டம் காரணமாக ஆளுநர் மாளிகை சுற்றிலும் உள்ள சாலைகள் மூடப்பட்டு, 50 க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதற்கு மோசமான நிர்வாகமும், ஊழல் அரசியலுமே காரணம் என்று தமிழக அரசை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடுமையாக சாடி சமூக வலைதளத்தில் கருத்து பதிவு செய்திருந்தார்.

கிரண் பேடி விமர்சனம்
மேலும் தமிழக மக்கள் சுயநலவாதிகள், கோழைத்தனமானவர்கள் எனவும் கிரண்பேடி தெரிவித்திருந்தார். கிரண்பேடியின் இந்த கருத்துக்கு தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக, எதிர்கட்சியான திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கட்சி பாகுபாடின்றி கிரண்பேடிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

ஸ்டாலின் நாராயணசாமி
திமுக தலைவர் ஸ்டாலின், புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, டிடிவி தினகரன், வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தொடர்ச்சியாக கிரண்பேடிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக மக்கள கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து புதுச்சேரி மாநில திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆளுநர் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோஷம்
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவா உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று கிரண்பேடி புதுச்சேரியைவிட்டு வெளியேற வலியுறுத்தியும், கிரண்பேடியை பிரதமர் மோடி உடனடியாக திரும்ப பெறக்கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். திமுகவினரின் போராட்டம் காரணமாக ஆளுநர் மாளிகை அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் குவிப்பு
மேலும் திமுகவின் போராட்டம் காரணமாக ஆளுநர் மாளிகைக்கு செல்லும் சாலைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டு வாகன போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்தது. அதேபோல் ஆளுநர் மாளிகையை சுற்றிலும் 50 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications