ஏப்ரல் 9 ம் தேதி சட்டசபை தேர்தல்.. புதுச்சேரி – கேரளா – அசாமில் பிரசாரம் ஓய்ந்தது! களநிலவரம் என்ன?
புதுச்சேரி : புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் தீவிரமாக நடந்து வந்த தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதையடுத்து இந்த 3 மாநிலங்களுக்கும் நாளை மறுநாள் (ஏப்ரல் 9) ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் கேரளா, அசாம் மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் ஒரே கட்டமாக வரும் 9 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அந்ததந்த மாநிலங்களில் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தான் கேரளா, அசாம், புதுச்சேரியில் தீவிரமாக நடந்து வந்த பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.
புதுச்சேரி நிலவரம்
புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டிக்கு மொத்தம் 16 இடங்கள் தேவை. ஆளும் கட்சியாக என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி உள்ளது. மீண்டும் இந்த கூட்டணி அப்படியே களமிறங்கி உள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் காங்கிரஸ் - திமுக - விசிக கட்சிகள் உள்ளன. இதுதவிர விஜயின் தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்து களமிறங்கி உள்ளது. தற்போது 194 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பொதுமக்கள் ஓட்டளிப்பதற்காக 1,099 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கேரளா நிலவரம்
கேரளாவை எடுத்து கொண்டால் மொத்தம் 140 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டிக்கு மொத்தம் 71 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக பினராயி விஜயன் உள்ளார். இந்த கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி களமிறங்கி உள்ளது.
மொத்தமுள்ள 140 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தமாக 30,471 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அசாம் நிலவரம்
அசாம் வடகிழக்கு மாநிலமாகும். இங்கு பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா முதல்வராக உள்ளார்.
இங்கு மொத்தம் 126 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டிக்கு மொத்தம் 64 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தற்போது ஆளும் பாஜக கூட்டணி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மொத்தம் 722 வேட்பாளர்கள் உள்ளன.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தலை அமைதியான முறையில் நடத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications