ஓபிஎஸ் பினாமி முதலீடு.. ஈபிஎஸ் ஆதரவாளர் கிலோ கணக்கில் தங்கம்.. பகீர் குற்றச்சாட்டுகள்- பரபர அதிமுக!
புதுச்சேரி : கிலோ கணக்கில் தங்கமும் கோடிக் கணக்கில் பணத்தையும் பெற்றுக்கொண்டு சசிகலாவுக்கு ஆதரவு கொடுத்த அன்பழகன், ஓபிஎஸ்ஸிடம் இருந்து ஏழு முறை லட்சக் கணக்கில் பணம் வாங்கியதாக ஓம் சக்தி சேகர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஓ.பி.எஸ் தமிழகத்தில் கொள்ளையடித்த பணம் புதுச்சேரியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் குற்றம்சாட்டியிருந்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய புதுச்சேரி மேற்கு மாநில அதிமுக செயலாளர் ஓம் சக்தி சேகர், அன்பழகன் செய்த ஊழல்கள் என அடுக்கடுக்காக பட்டியலிட்டார்.
ஓபிஎஸ்-ஈபிஎஸ் சண்டையெல்லாம் சும்மா.. புதுவையில் கட்டிப்புரளும் ர.ரக்கள் - அங்கேயும் ஒற்றை தலைமையாம்!
புதுச்சேரி அதிமுக
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையேயான ஒற்றைத் தலைமை மோதல் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. வரும் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடத்த திட்டமிடும் எடப்பாடியின் முயற்சியைத் தடுக்க ஓபிஎஸ் தரப்பினர் மும்முரமாகப் பணியாற்றி வருகின்றனர். இதற்கிடையே, புதுச்சேரி அதிமுகவிலும் ஒற்றைத் தலைமை பிரச்சனை கடுமையாக கிளம்பியுள்ளது. புதுச்சேரியில் கிழக்கு மாநில செயலாளராக முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராகவும், மேற்கு மாநிலச் செயலாளராக முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராகவும் உள்ளனர். இதனால் புதுச்சேரியில் ஓம் சக்தி சேகர் - அன்பழகன் மோதல் பகிரங்கமாக நிலவி வருகிறது.
ஓபிஎஸ்ஸின் பினாமி
புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், ஓ.பி.எஸ்-ஸின் பினாமியாக புதுச்சேரி அதிமுக மேற்கு மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர் செயல்படுவதாகவும், ஓ.பி.எஸ்ஸின் பினாமியாக உள்ள ஓம் சக்தி சேகர் அரியூர் பகுதியில் 30 கோடி ரூபாயில் சொத்து வாங்கி உள்ளதாகவும், தமிழகத்தில் ஓபிஎஸ் கொள்ளையடித்த பணத்தை புதுச்சேரியில் முதலீடு செய்துள்ளதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
துரோகிகள்
மேலும் ஒற்றைத் தலைமையைப் பெற பச்சோந்தித் தனமாக செயல்பட்டு குள்ளநரி வேஷம் போட்டு ஒட்டுமொத்த சூழ்ச்சியோடு ஓ.பன்னீர்செல்வம் வலம் வருவதாக விமர்சனம் செய்த அன்பழகன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் துரோகிகள் தான் எனத் தெரிவித்துள்ளார்.
கிலோ கணக்கில் தங்கம்
இந்நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மேற்கு மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர், கிலோ கணக்கில் தங்கமும் கோடிக் கணக்கில் பணத்தையும் பெற்றுக் கொண்டு சசிகலாவுக்கு ஆதரவு கொடுத்த அன்பழகன் ஓபிஎஸ்ஸிடம் இருந்து ஏழு முறை லட்ச கணக்கில் பணம் வாங்கியதாக ஓம் சக்தி சேகர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக எம்.பி
தொடர்ந்து பேசிய அவர், அன்பழகனின் சொத்து ஏலத்திற்கு வந்த பிறகு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் தமிழக அமைச்சர்களிடம் தலா 5 லட்ச ரூபாய் என ஒன்றரை கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும், தன்னை காப்பாற்றிக் கொள்ள ஓபிஎஸ்ஸிடம் 7 முறை லட்ச கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு தற்போது அவரது பேனரை கிழித்துள்ளார்.
சவால்
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்மானம் இயற்ற பொதுக்குழுவை கூட்டுவதற்காக பெறப்பட்ட பணம் எங்கே? எனவும் இந்த பணத்தை யாருக்காவது பிரித்து கொடுத்தீர்களா எனவும் கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் ஒற்றைத் தலைமை வரும்போது புதுச்சேரியில் அன்பழகன் கட்சியில் இருக்க மாட்டார் என சவால் விட்ட ஓம் சக்தி சேகர், கட்சியின் சின்னமும் கொடியும் எங்கு இருக்கிறதோ அங்கே தான் நான் இருப்பேன் எனக் கூறினார். இப்படி இரு தரப்பினரின் மோதலால் புதுச்சேரி அதிமுகவில் பரபரப்பு நிலவி வருகிறது.