கொரோனாவால் முன்கூட்டியே முடியும் மீன்பிடி தடைக்காலம்.. மீன்பிடிக்க ஆயத்தமாகும் மீனவர்கள்..
புதுச்சேரி: மீன்பிடி தடைக்காலம் முடிவதற்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், புதுச்சேரி மீனவர்கள் மீண்டும் கடலுக்கு செல்வதற்காக படகுகளை பழுதுபார்த்தல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் காலாப்பட்டு, தேங்காய்த்திட்டு, வைத்திக்குப்பம், வீராம்பட்டினம், சின்ன வீராம்பட்டினம், நரம்பை, பனித்திட்டு, குருசுகுப்பம் உள்பட 18 மீனவ கிராமங்களும், காரைக்கால் மாவட்டத்தில் மண்டபத்தூர் முதல் வடக்கு வாஞ்சூர் வரை 11 மீனவ கிராமங்களும் உள்ளன.

இந்த மீனவ கிராமங்களில் இருந்து சுமார் 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 2 ஆயிரம் பைபர் படகுகள், ஆயிரம் படகுகள், நூற்றுக்கும் மேற்பட்ட பாய்மர படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் உள்பட மாநிலம் முழுவதும் மீன்பிடி தொழிலில் நேரடியாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும், மறைமுகமாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ந்தேதி முதல் ஜூன் மாதம்14 ந்தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலகட்டத்தில் மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளில் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25 ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அன்று முதல் விசைப்படகுகளில் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

இந்நிலையில் மீன்பிடி தடைக் காலத்தை குறைக்க வேண்டும் என்று மீனவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து மீன்பிடி தடைக்காலத்தை வரும் 31 ந் தேதியுடன் முடித்து கொள்வதாகவும், ஜூன் 1 ந் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மீன்பிடி தடைக்காலம் முடிவடைவதற்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், படகுகளை சீரமைக்கும் பணிகளில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். எஞ்சின் பழுதுபார்த்தல், வர்ணம் பூசுதல், வலைகளை சீரமைத்தல் போன்ற பணிகளில் அவர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இதனால் தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகம் தற்போது சுறுசுறுப்புடன் காணப்படுகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் பூஜை போட்டு மீனவர்கள் தங்கள் தொழிலை தொடங்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications