தடைக்காலம் முடிவுக்கு வந்தும் மீன்பிடிக்க ஆர்வம் காட்டாத புதுவை மீனவர்கள்.. காரணம் என்ன?
புதுச்சேரி: புதுச்சேரியில் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்த போதிலும், விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தயாராக இல்லை. மீன்களை விற்பனை செய்யவும், ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என்பது மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.
Recommended Video
புதுச்சேரியில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14 ந் தேதி முதல் ஜூன் மாதம் 15 ந் தேதி வரை மீன்பிடி தடை காலம் ஆகும். இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மூலம் சென்று மீன் பிடிப்பதற்கான தடை அமலில் இருப்பது வழக்கம்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக புதுவை, காரைக்கால் பகுதிகளில் கடந்த மார்ச் மாதம் 24 ந் தேதி முதலே மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. எனவே மீன்பிடி தடைக்காலத்தை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டது. அதை ஏற்று மத்திய அரசும் மீன்பிடி தடைக்காலத்தை மே 31-ந் தேதியாக குறைத்து அறிவித்தது.
இந்நிலையில் தடைக்காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில், புதுச்சேரி மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த மீன்பிடி தடைக்காலம் ஜூன் மாதம் 15 ந் தேதி வரை இருக்குமென்பதால் மீனவர்கள் தங்களது படகுகளை சீரமைக்காமல் வைத்து இருந்தனர்.
மேலும் பிடிக்கப்படும் மீன்களை ஏற்றுமதி செய்வதற்கோ, விற்பனை செய்வதற்கோ ஏதுவான சூழல் இல்லை எனவும், விசைப்படகில் அருகில் உள்ள தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநில தொழிலாளர்கள் பணியாற்றுவதற்கு அரசு அனுமதிக்கப்படவில்லை என்றும், மீன் பிடித்தடைக்காலம் 61 நாளில் இருந்து 47 நாட்களாக குறைத்து வெளியிட்ட அறிவிப்பு மிகவும் தாமதமாக அறிவித்ததால் படகுகள் மற்றும் மீன் பிடி சாதனங்களை முன்கூட்டியே பழுது பார்ப்பதற்கு போதிய அவகாசம் இல்லை போன்றவற்றின் காரணமாக மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடிக்கு நிவாரண சலுகைகள்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
இதனால் வருகிற 5-ந் தேதி கடலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மீன்பிடி தடைக்கால நிவாரணம், பொதுமுடக்க காலத்திற்கான நிவாரண உதவிகளும் இதுவரை கிடைக்காத காரணத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.