சவ ஊர்வலம் நடத்தி.. ஒப்பாரி வைத்து.. 5 கிராம மக்கள் அதிரடி போராட்டம்.. கலகலத்த புதுவை
Recommended Video

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 7 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகளால் மூடப்பட்டுள்ள ரயில்வே கேட்டை திறக்க கோரி 5 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அரும்பார்த்தபுரம் பகுதியில் சுமார் 7 வருடங்களாக ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஆமை வேகத்தில் நடைபெறும் இந்த பணியின் காரணமாக தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் அடிக்கடி விபத்துகள் ஏறபட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாமல் பாலம் கட்டுமானப் பணியால் இப்பகுதியில் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.

மேலும் மேம்பாலப் பணிகளால் இங்குள்ள ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சுடுகாட்டிற்கு சடலங்களை எடுத்துச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே சுடுகாட்டிற்கு சடலங்களை எடுத்துச் செல்லும் வகையில் மூடப்பட்டுள்ள ரயில் கேட்டை திறக்க கோரி ஜி.என்.பாளையம், வெண்ணிசாமி நகர், நடராஜன் நகர் உள்ளிட்ட 5 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தாரை தப்பட்டை அடித்தபடி, சாவுப்பாடை அலங்கரித்து தூக்கிக் கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

ரயில் கேட் அருகே வந்த அவர்கள் ரயில்வே கேட்டை திறந்து விடக்கோரி ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் அனைவரும் ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications