அடிதூள்.. மாணவர்களுக்கு குஷி அறிவிப்பு.. புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ்
புதுச்சேரி: புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி அளித்து புதுவை கல்வித் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டமே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அங்கே இப்போது கல்வியாண்டு இறுதியை எட்டியுள்ள நிலையில், தேர்வுகளும் நடந்து வருகிறது.

இதனிடையே அங்கே 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி தரப்பட வேண்டும். 8ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் நூறுக்கும், முழு ஆண்டு தேர்வு மதிப்பெண்கள் நூறுக்கும் எனக் குறிப்பிட்டு தேர்ச்சி அட்டவணையில் குறிப்பிட வேண்டும்.
9ம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு இறுதித்தேர்வில் 35 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால்தான் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படவேண்டும். இதன் அடிப்படையில் தேர்ச்சி பட்டியலைத் தயாரிக்கப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அதேபோல் பள்ளிகளில் தேர்ச்சி பெற்றோர் விவரங்கள் அடங்கிய பட்டியலைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அப்போது இயக்குநரகத்தால் தரப்பட்ட பள்ளி அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தல் அங்கீகார உத்தரவின் நகலைத் தனியார்ப் பள்ளிகள் இணைக்க வேண்டும். எல்கேஜி முதல் 9ம் வகுப்பு வரையிலான கோடைவிடுமுறை இன்று முதல் தொடங்கியது. இதை அனைவரும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications