28 நாளுக்கு பிறகு.. திறக்கப்பட்ட தொழிற்சாலைகள்,உணவகங்கள்.. இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் புதுச்சேரி
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 28 நாட்களுக்கு பிறகு பல்வேறு நிபந்தனைகளுடன் தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், உணவகங்கள் இன்று முதல் செயல்பட தொடங்கின. இதனால் புதுச்சேரி மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24 ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. புதுச்சேரி மாநிலத்தை பொருத்தவரையில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதலே ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு அமலில் உள்ளதால்,
பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அத்தியாவசிய தேவைகளான பால், மருந்து, மளிகை மற்றும் உணவு பொருட்களுக்கான கடைகள் தவிர்த்து பிற கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டதுடன், அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. அரசின் ஊரடங்கு உத்தரவு, மக்கள் ஒத்துழைப்பு ஆகியவற்றால் கொரோனா பரவல் பெருமளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இச்சூழலில் இன்றுமுதல் ஊரடங்கில் சில தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி அந்தந்த மாநில அரசுகள் தங்களது மாநிலத்தில் கொரோனா பாதிப்புக்கு ஏற்றவாறு ஊரடங்கு தளர்வுகளை நடைமுறைப்படுத்தி கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல் சமூக இடைவெளியை பின்பற்றியும், உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி விவசாய தொழில்கள், உணவகம், 100 நாள் வேலை திட்டம், பல்வேறு தொழில் நிறுவனங்கள், கட்டுமானப் பணிகள், எலக்ட்ரீஷியன், தச்சர்கள், பிளம்பர்கள் மீன்பிடித் தொழில், ஐடி மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் அனைத்தும் 33 சதவீதம் பணியாளர்களை கொண்டு செயல்படுவதற்கு புதுச்சேரி அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, மேற்கண்ட பணிகள் அனைத்து இன்று முதல் வழக்கம்போல் தொடங்கப்பட்டுள்ளது.


மேலும் உணவகங்களில் பார்சலில் மட்டுமே சமூக இடைவெளியை கடைபிடித்து உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனிடையே வரும் 3 ஆம் தேதி வரை உள்ளூர் மற்றும் வெளி மாநில போக்குவரத்திற்கான தடை தொடரும் எனவும் மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார். இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள மின் நுகர்வோர்கள் இன்று முதல் அந்தந்த மையங்களில் மின் கட்டணத்தை செலுத்தலாம் என மின் துறை அறிவித்திருந்தது. அதனடிப்படையில் பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்த வந்தார்கள். ஆனால் மின் கட்டண வசூல் மையங்கள் திறப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதை பார்த்து திரும்பி சென்றனர்.


இது குறித்து மின் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மின்துறை அலுவலகம் செயல்பட அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால் மின் கட்டணம் செலுத்த பொதுமக்கள் அதிகம் பேர் வருவதால் அதற்கான ஏற்பாடுகள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை மாவட்ட நிர்வாகம் தெரிவித்து, அனுமதியளித்த பின்புதான் வசூல் மையங்கள் திறக்கப்படும் என தெரிவித்தனர்.













Click it and Unblock the Notifications