புதுச்சேரியில் 1 முதல் 8 வரை பள்ளிகளுக்கு 10 நாட்கள் லீவு..தெலங்கானாவில் அரைநாள் மட்டுமே ஸ்கூல்
இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் பரவி வருவதை அடுத்து, புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 16 முதல் 26ஆம் தேதி 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்புளுயன்சா எச்3என்2 வைரஸ் காய்ச்சல் பரவலைத் தடுக்கும் வகையில் கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக சிறியவர், பெரியவர் என அனைத்துத் தரப்பினரும் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு மக்கள் பயப்பட வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் பரவலைத் தடுக்கும் வகையில் கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மார்ச் 16 முதல் 26ஆம் தேதி வரை இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. வைரஸ் காய்ச்சல் பரவலை சமாளிக்க புதுச்சேரி சுகாதாரத் துறை 24 மணி நேரமும் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தெலங்கானா மாநிலத்தில் வெய்யிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இன்று முதல் அனைத்து பள்ளிகளும் அரைநாள் மட்டுமே செயல்படும் என்று மாநில அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் 36 முதல் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வருகின்றது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெலங்கானா அரசு வெளியிட்ட அறிவிப்பில், "மாநிலம் முழுவதும் உள்ள தனியார், அரசு மற்றும் அரசு உதவிபெறும் மழலை, உயர்நிலைப் பள்ளிகள் அனைத்தும் நிகழ் கல்வியாண்டின் மீதமுள்ள நாள்களில் காலை 8 மணிமுதல் பகல் 12.30 மணிவரை மட்டுமே செயல்பட வேண்டும்.
பள்ளிகளில் உள்ள மதிய உணவு, சத்துணவு பகல் 12.30 மணிக்கு அளிக்க வேண்டும். மேலும், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்திக் கொள்ளலாம். 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்கள் உள்ள பள்ளிகள் பகல் 1 முதல் மாலை 5 வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications