"முற்றும் மோதல்!" முதல்வர் ரங்கசாமிக்கு எதிராகவே போராட்டம்! பாஜக மீது அதிருப்தியில் என்ஆர் காங்கிரஸ்
புதுச்சேரி: புதுச்சேரியில் இப்போது என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசு நடந்து வரும் நிலையில், அங்கு இரு தரப்பிற்கும் இடையேயான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டுடன் இணைந்து புதுச்சேரியிலும் கடந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
காங்கிரஸ் வெறும் இரு இடங்களில் மட்டுமே வென்றது. என்ஆர் காங்கிரஸ் அதிகபட்சமாக 10 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
விழுப்புரம் அருகே அண்ணாசிலை அவமதிப்பு: பாஜகவினர் 3 பேர் அதிரடி கைது
புதுச்சேரி
இருப்பினும், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் இல்லை என்பதால் 6 இடங்களை வென்று இருந்த பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. பாஜகவுக்கு 3 சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவு, 3 நியமன எம்எல்ஏக்களும் இருந்ததால் புதுவையில் பாஜகவுக்கு மொத்தம் 12 எம்எல்ஏக்கள் உள்ளனர். இரு கட்சிகளும் கிட்தட்ட சம பலத்துடன் இருக்கும் நிலையில், ஆட்சியும் கூட இதுவரை சுமுகமாகவே நடைபெற்றது.
திடீர் போராட்டம்
இந்தச் சூழலில் திடீர் திருப்பமாகக் கடந்த 23ஆம் தேதி பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ அங்காளன் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார். முதல்வருக்கு எதிராகச் சட்டசபை வளாகத்திலேயே இந்தப் போராட்டத்தை நடத்திய அங்காளன், புதுச்சேரிக்கு பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக நியமிக்கப்பட வேண்டும் என்று கூறி அதிர்ச்சி அளித்தார். இந்தப் போராட்டத்திற்கு பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரமும் நேரில் ஆதரவு தெரிவித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
என்ஆர் காங்கிரஸ் அதிருப்தி
இது என்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. எவ்வித ஆதாரமும் இல்லாமல் முதல்வர் மீது குற்றஞ்சாட்டிய எம்எல்ஏக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக 5 என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அமைச்சர் லட்சுமி நாராயணன், துணைச் சபாநாயகர் முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்தும் வலியுறுத்தி உள்ளனர்.
முதல்வருடன் மீட்டிங்
அப்போது கொஞ்சக் காலம் அவர்களை அமைதியாக இருக்கும்படி முதல்வர் ரங்கசாமி கூறியதாகத் தெரிகிறது. இருப்பினும், இந்த விவகாரத்தை என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏகள் விடுவதாகத் தெரியவில்லை. 4 முறை முதல்வராக இருந்த ரங்கசாமி குறித்து இப்படி ஆதாரமற்ற வகையில் பேசுவது சரியானது இல்லை என்று குறிப்பிடும் என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏகள், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளனர்.
அடுத்தகட்ட திட்டம்
முதல்வர் இந்த விவகாரத்தில் அமைதி காக்கும் நிலையில், இது குறித்து சபாநாயகர் செல்வம் மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்திக்க என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. முதல்வர் குறித்த சுயேச்சை எம்எல்ஏவின் பேச்சு குறித்தும் பாஜக எம்எல்ஏ அதற்கு ஆதரவு அளித்தது தொடர்பாகவும் அதில் பேச முடிவு செய்துள்ளனர். டெல்லி சென்றுள்ள சபாநாயகர் செல்வம் இன்று புதுச்சேரி திரும்பும் நிலையில், உடனடியாக அவரை சந்தித்துப் பேச என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திட்டமிட்டு உள்ளனர்.
விரிசல்
முதல்வர் குறித்து அவதூறாகப் பேசிய எம்எல்ஏக்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை. இந்தப் பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்படாத பட்சத்தில் கூட்டணியில் இரு கட்சிகளுக்கும் இடையேயான மோதல் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்த மீட்டிங்கில் நடக்கும் சம்பங்களை வைத்தே அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு செய்ய உள்ளனர் என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்!