புதுக்கோட்டை: எடப்பாடி பழனிசாமி-க்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் பாண்டித்துரை வீட்டில் ஐடி ரெய்டு!
புதுக்கோட்டை: அதிமுக இபிஎஸ் கோஷ்டி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் புதுக்கோட்டை பாண்டித்துரை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்த பொதுப்பணித்துறை ஊழியராக பணியாற்றிய மாணிக்கத்தின் மகன் பாண்டித்துரை. நெடுஞ்சாலை துறையில் அரசு ஒப்பந்ததாரராக கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். அரசு ஊழியர் மாணிக்கம் மறைந்ததால் அவரது மகன் பாண்டித்துரைக்கு கருணை அடிப்படையில் ஒப்பந்ததாரர் பணி வழங்கப்பட்டிருந்தது.

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமானவராக விஸ்வரூபம் எடுத்தாராம் பாண்டித்துரை. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது கோலோச்சிய ஒப்பந்ததாரர்களில் பாண்டித்துரையும் ஒருவர் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான பாண்டித்துரை மீது பல்வேறு புகார்கள் வருமான வரித்துறைக்கு சென்றன. இதனையடுத்து புதுக்கோட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு 2 வாகனங்களில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் குழு வந்தது. இன்று காலை முதல் கடந்த 3 மணிநேரத்துக்கும் மேலாக பாண்டித்துரை வீட்டில் அங்குலம் அங்குலமாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் பாண்டித்துரை, வருமான வரி ரெய்டில் சிக்கி இருப்பது அதிமுக இபிஎஸ் கோஷ்டியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதேநேரத்தில் ஓபிஎஸ் கோஷ்டி இதனை உன்னிப்பாக கவனித்து வருகிறது.












Click it and Unblock the Notifications