புதுச்சேரியில் பரபரப்பு.. ரங்கசாமி வீட்டில் வருமான வரித்துறை திடீர் அதிரடி ரெய்டு
புதுச்சேரி: புதுச்சேரியில் மக்களவை தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான ரங்கசாமி வீட்டில் வருமானவரித் துறை மற்றும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மக்களவை தொகுதிக்கான தேர்தல் மற்றும் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

புதுச்சேரி மக்களவை தொகுதிக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கமும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் மருத்துவ கல்லூரி அதிபர் கே.நாராயணசாமியும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 18 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அதேபோல் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 8 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான ரங்கசாமி வீட்டில் வருமானவரித் துறை மற்றும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திலாஸ்பேட்டை பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு மூன்று கார்களில் வந்த 10 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அவருடைய வீட்டில் உள்ள கீழ்தளத்தில் உள்ள இரண்டு அறைகளில் சோதனை நடத்தினர். அங்கு பணமோ, பொருளோ எதுவும் கிடைக்கவில்லை. மேலும் மேல் தளத்தில் உள்ள ரங்கசாமியின் அறையின் சாவி ரங்கசாமி வசம் உள்ளது. அவர் தற்போது வெளியே சென்றுள்ளதால் அதிகாரிகள் அங்கேயே தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.

இதனிடையே ரங்கசாமி வீட்டின் முன்பு 100 க்கும் மேற்பட்ட என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் திரண்டு வருவதால் அந்த பகுதியில் ஒரு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி வீட்டில் வருமானவரித் துறை மற்றும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் சம்பவம் புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications