ஏர்போர்ட் டூ கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் வரை மெட்ரோ.. எந்த ரூட்டில் செல்லும்? ரெடியான பிளான்!
சென்னை: சென்னை கிளாம்பாக்கத்திற்கு மெட்ரோ சேவை விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். இந்த மெட்ரோ தொடர்பான விரிவான திட்ட அறிக்கை இந்த வாரம் வெளியாக உள்ளதாம்.
சென்னை விமானநிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ சேவையை நீட்டிக்க, ரூ,4,625 கோடி மதிப்பில் பெறப்பட்டு மத்திய அரசின் மூலதன பங்கீட்டு நிதிக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று பட்ஜெட்டில் அவர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார் .

திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் இந்த வாரமே இதன் ரூட் மேப் உட்பட பல விவரங்கள் அடங்கிய திட்ட அறிக்கை வெளியாகும் என்கிறார்கள்.
திட்ட அறிக்கை; சென்னை புறநகர் பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில் சேவை அளிக்க தயாராகும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளை விரிவுபடுத்தும் விதமாக இந்த திட்டம் கையில் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும். மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.
இதில் மாதவரம் மற்றும் தரமணி இடையே பாதை அண்டர் கிரவுண்ட் பாதையாகவும், சிறுசேரியில் உள்ள சிப்காட்டின் கடைசி நிலையம் வரை மேலே பாலம் அமைக்கப்பட்ட உயரமான பாதையாகவும் இருக்கும். அண்டர் கிரவுண்ட் பாதை அமைக்க அதிக நேரம் எடுக்கும். இன்னொரு பக்கம் மேலே பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய நிலையங்கள்: இந்த நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில் வழித்தடம் 3ல் புதிய ரயில் நிலையங்கள் அமைக்க ரூ.4,058.20 கோடியில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து போடப்பட்டு உள்ளது. புதிய மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்துடன் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
மெட்ரோ பணிகள்: சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் நம்பக தன்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தை விட ஆகஸ்டு மாதத்தில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 215 பயணிகள் மெட்ரோ இரயில்களில் அதிகம் பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என்றும் மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது:- நடப்பு அண்டு ஜனவரி மாதத்தில் 66,07,458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 63,69,282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69,99,341 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 66,85,432 பயணிகளும், மே மாதத்தில் 72,68,007 பயணிகளும், ஜூன் மாதத்தில் 74,06,876 பயணிகளும், ஜூலை மாதத்தில் 82,53,692 பயணிகளும் மற்றும் ஆகஸ்டு மாதத்தில் 85,89,977 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications