ஹெல்மெட் போட்டா பூ வாடிடும்.. இது நாராயணசாமி!! பைன் போடுவேன்.. இது கிரண்பேடி.. புதுச்சேரி கலகல!!
Recommended Video
புதுச்சேரி:தலையில் வைத்துள்ள பூ வாடிவிடும் என்பதால் பெண்கள் ஹெல் மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்வதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டாய ஹெல்மெட் சட்ட ம் அமுல்படுத்தப்பட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால், இச்சட்டத்தை நடைமுறைப் படுத்துவதை மாநில அரசு கைவிட்டது.
ஆனால் ஆளுநர் கிரண்பேடி கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளார். ஹெல்மெட் விவகாரத்தில் ஆளுநர் கிரண்பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமிக்கு அடிக்கடி வார்த்தைபோர் முற்றி வருகிறது.
சாலை பாதுகாப்பு
இந் நிலையில் சாலை பாதுகாப்பு வார விழா போக்குவரத்து துறை அலுவலகத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. அப்போது நாராயணசாமி பேசியதாவது: அனைத்து மாநில நகரப்பகுதிகளிலும் வாகன போக்குவரத்து அதிகரித்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பூ வாடிவிடக்கூடாது
இந்த பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால்தான் சரி செய்ய முடியும். இருசக்கர வாகனத்தில் செல்லும் தாய்மார்கள் தலையில் வைக்கும் பூ வாடி விடக்கூடாது என்பதற்காக ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர்.
எதுவும் செய்யமுடியாது
புதுச்சேரி மாநிலத்தில் சட்டத்தினை வைத்து எதுவும் செய்ய முடியாது. விழிப்புணர்வு ஏற்படுத்த புதுச்சேரி மக்களுக்கு அன்பாக சொன்னால் ஏற்று கொள்வார்கள். சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், பாதுகாப்பு வசதிகளுக்காகவும் 3 கோடி செலவு செய்யப்படும். மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தர்ணிவில் ஈடுபட்டுள்ளது சரியான ஒன்று. லோக்சபா தேர்தலை மனதில் கொண்டு எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களை சிபிஐயை கையில் வைத்துகொண்டு மோடி பழிவாங்கும் நோக்கில் ஈடுபடுகிறார்.
ஜனநாயகம் கிடையாது
சிபிஐ அமைப்பிடமே ஊழல் இருந்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டு வந்துள்ளது. அந்த அமைப்பினை வைத்து மிரட்டுவது ஜனநாயகம் அல்ல. 2019ம் ஆண்டு லோக் சபா தேர்தலில் இவை அனைத்தும் மாறும் என்று பேசினார்.
பதிலடி தந்த கிரண்பேடி
மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அவர் பேசிய நிலையில் ஆளுநர் கிரண்பேடி அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:புதுச்சேரி மிகவும் தூய்மையாகவும், அமைதியான நகரமாக இருப்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர்.
சாலை விபத்துகளால் பலி
ஆனால் புதுச்சேரியில் பெரும்பாலானோர் ஹெல்மெட் அணிந்து செல்லாததால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.
விரைவில் சட்டம்
அந்த சட்டம் இருந்தும், அதை யாரும் பின்பற்றுவதில்லை. புதுச்சேரி மாநிலத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டுமென்ற சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். ஹெல்மெட் அணிந்து செல்லாதவர்களிடம் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பார்கள் என்றார்.