புதுவை- தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் பதவியேற்றார்-23 நாட்களுக்கு பின் எம்எல்ஏக்கள் பதவியேற்பு
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் பதவியேற்றார். அவருக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 23 நாட்களுக்குப் பின்னர் இன்று எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் பதவியேற்றனர்.
Recommended Video
30 இடங்களைக் கொண்ட புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி 10; அதன் கூட்டணி கட்சியான பாஜக 6 இடங்களில் வென்றது. திமுக 6 இடங்களிலும் காங்கிரஸ் 2 இடங்களிலும் வென்றது. 6 சுயேட்சைகள் இந்த தேர்தலில் வெற்றி பெற்றனர்.
இதனால் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. இருந்தபோதும் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக இடையே துணை முதல்வர் பதவி, அமைச்சர்கள் எண்ணிக்கை தொடர்பாக கடும் அதிருப்தி நிலவியது. மேலும் திடீரென பாஜக 3 நியமன எம்.எல்.ஏக்களை நியமித்தது; அத்துடன் 3 சுயேட்சை எம்.எல்.ஏக்களையும் வளைத்தது பாஜக.
புதுசேரியில் மே 26ம் தேதி சட்டசபை கூட்டம்.. ஒருவழியாக பதவி ஏற்கப் போகும் எம்எல்ஏக்கள் !
இதனால் பாஜகவே தனித்து ஆட்சி அமைத்துவிடுமோ என பெரும் அச்சத்தில் இருக்கிறது என்.ஆர்.காங்கிரஸ். பாஜகவின் இந்த சித்துவிளையாட்டுகளால் தற்காலிக சபாநாயகர் யாரும் நியமிக்கப்படாமல் இருந்தனர்; எம்.எல்.ஏக்களும் பதவியேற்காமல் இருந்தனர். இது பெரும் சர்ச்சையானது.
இதனையடுத்து இன்று புதுச்சேரி சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக லட்சும் நாராயணன் பதவியேற்றார். அவருக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்துவைத்தார். மேலும் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான 23 நாட்களுக்குப் பின்னர் இன்று புதுச்சேரி சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர்.