தள்ளாடும் புதுச்சேரி.. 21 நாட்களாச்சு சட்டசபை கூடலை... எம்.எல்.ஏக்கள் பதவியேற்கலை-என்னதான் நடக்குமோ?
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் அரசியல் குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது. புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு மிக அதிகரித்து வரும் சூழலில் புதிய அரசு அமையாமல் இருப்பது அம்மாநிலத்தில் கடும் நெருகடியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கு முன்பு இருந்தே என்.ஆர். காங்கிரஸ், பாஜக இடையே முட்டல் மோதல் நீடித்து வருகிறது. காரைக்காலில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதுவையில் அடுத்து பாஜகதான் ஆட்சி அமைக்கும் என்றார்.
இதில் கடுப்பாகிப் போன என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பாஜகவுடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இதனால் பதறிப் போன பாஜக, ரங்கசாமியிடம் மன்றாடி கூட்டணியை தக்க வைத்துக் கொண்டது.
பாஜக பிடிவாதம்
சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் வென்று ஆட்சியை பிடித்தது. ஆனால் எடுத்த எடுப்பிலேயே துணை முதல்வர் மற்றும் 2 அமைச்சர்கள் பதவி எங்களுக்கே என பாஜகவாகவே முடிவெடுத்து அறிவித்தது. இதனால் ரங்கசாமி மீண்டும் அதிருப்தி அடைந்தார்.
பலத்தை உயர்த்திய பாஜக
அதன்பின்னர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு ரங்கசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனை வாய்ப்பாக பயன்படுத்தி திடீரென 3 நியமன எம்.எல்.ஏக்களை மத்திய் பாஜக அரசு நியமித்தது. இந்த 3 பேரும் பாஜகவை சேர்ந்தவர்கள். மேலும் தேர்தலில் வெற்றி பெற்ற சுயேட்சைகளில் 3 பேரை தங்கள் பக்கம் பாஜக வளைத்துப் போட்டது. இதனால் சட்டசபையில் பாஜகவின் பலம் 12 ஆக அதிகரித்தது.
அதிருப்தியில் ரங்கசாமி
இதனை சற்றும் எதிர்பார்க்காத ரங்கசாமி, பாஜக மீது மிகவும் கடும் கோபத்தில் இருக்கிறாராம். பாஜகவைப் பொறுத்தவரையில் என்.ஆர். காங்கிரஸை விட தங்களுக்கே அதிக எம்.எல்.ஏக்கள் இருப்பதால், தாங்கள் விரும்பும் ஆட்சி அமைய வேண்டும்; தங்களது கையே ஓங்கி இருக்க வேண்டும் என அடம்பிடிக்கிறது.
நிர்வாகம் முடக்கம்
ஆனால் ரங்கசாமியோ எடுத்த எடுப்பிலேயே அதாவது ஆட்சியே அமைக்காத சூழலிலேயே பாஜக இப்படி ஆட்டம் போடுகிறதே... என்கிற அதிருப்தி. மேலும் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலரையும் வளைக்கவும் பாஜக பேச்சுவார்த்தையும் நடத்துகிறதே என்கிற கோபம். இதனால் ரங்கசாமி தலைமையிலான புதிய அரசு இன்னமும் பதவியேற்காமல் நிர்வாகம் முடங்கிக் கிடக்கிறது.
தள்ளாட்டத்தில் புதுவை
புதுச்சேரி தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்கிற அறிவிப்பு மட்டும்தான் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ரங்கசாமி மட்டும் முதல்வராக பதவியேற்றார். ஆனால் சட்டசபை எப்போது கூடும்? புதிய எம்.எல்.ஏக்கள் எப்போது பதவியேற்பார்கள் என்பது தெரியாத தள்ளாட்டத்தில் இருக்கிறது புதுச்சேரி அரசியல்.
இதுதான் பிரச்சனை
ரங்கசாமியை பொறுத்தவரை தமது கட்சியையே காலி செய்துவிட்டு பாஜக தனித்தே ஆட்சி அமைக்குமோ என்கிற பீதியில் இருக்கிறார். பாஜகவோ ரங்கசாமியை ஆட்சி அமைக்க விட்டுவிட்டு பின்னர் கவிழ்த்து விடலாம் என கணக்கு போடுகிறது. இதனால் புதுச்சேரியில் அரசியல் குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது.