சோனியா கூட சொன்னார்.. ஆனால் கட்சி பணி இருக்கிறதால போட்டியிடவில்லை - நாராயணசாமியின் புது விளக்கம்!
புதுவை: சட்டமன்ற தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்பது குறித்து நாராயணசாமி விளக்கம் அளித்துள்ளார்.
பாஜக அதிகாரம் மற்றும் பணபலத்தை வைத்து இந்த தேர்தலை எதிர்கொள்கிறது என்றும் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.
புதுவையில் திமுக, காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. காங்கிரஸ் 15 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி
ஆனால் புதுவை முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான நாராயணசாமி போட்டியிடவில்லை. தேர்தலில் நாராயணசாமி போட்டியிடாததற்கு பல்வேறு தகவல்கள் உலா வந்தன. இந்த நிலையில் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்பது குறித்து நாராயணசாமி விளக்கம் அளித்துள்ளார்.

சோனியா காந்தி வலியுறுத்தினார்
நிருபர்களிடம் பேட்டியளித்த நாராயணசாமி கூறியதாவது:- சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுமாறு சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் என்னை வலியுறுத்தினார்கள் ஆனால் காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்ரமணியம் தேர்தலில் நிற்பதால், தேர்தல் பணிகளை கவனிப்பதற்காகவே நான் தேர்தலில் போட்டியிடவில்லை. ஏனாம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் மல்லாடி திடீரென என்.ஆர்.காங்கிரசை ஆதரித்தால் அங்கு மாற்று வேட்பாளரை தேர்வு செய்ய காலதாமதம் ஏற்பட்டது. எனவே அந்த தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் கோலப்பள்ளி அசோக் என்ற வேட்பாளருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கும்.

பொய் கூறும் பாஜக
புதுச்சேரியில் மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 15,000 கோடி வழங்கினோம். ஆனால் நாராயணசாமி அதனை மக்களுக்கு செலவு செய்யாமல், காங்கிரஸ் தலைமையிடம் கொடுத்து விட்டார் என்று அமித்ஷா கூறினார். இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க நான் வலியுறுத்தினேன். ஆனால் இதுவரை அவர்களால் நிரூபிக்க முடியவில்லை. நான் எந்த விசாரணைக்கும் தயார் என்றும் சவால் விடுத்தேன் .ஆனால் பாஜக வாய்மூடி மவுனியாக உள்ளது. இதன் மூலம் பொய்யை கூறியே ஆட்சிக்கு வர பாஜக முயற்சிப்பது தெளிவாக தெரிகிறது.

விதிகள் மீறிய அதிகாரிகள்
புதுவையில் வேட்பு மனு பரிசீலனை முடிந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல்களை தேர்தல் துறை மிக காலதாமதமாக கொடுக்கப்பட்டுள்ளது இது விதிமுறைகளுக்கு மீறிய செயல். பாஜக அதிகாரம் மற்றும் பணபலத்தை வைத்து இந்த தேர்தலை எதிர்கொள்கிறது, மத்திய அரசின் அமைப்புகள் இங்கு வந்து முகாமிட்டு ஒரு சில நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இது அதிகார துஷ்பிரயோகம் என்று நாராயணசாமி குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications