புதுச்சேரி ஆளுநர் தமிழிசை ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிவிட்டார்.. உடனே பதவி விலகணும்: நாராயணசாமி பரபர
புதுச்சேரி: ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவியில் இருந்து விலக வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் ரங்கசாமி உட்பட நான்கு அமைச்சர்கள் பதவி வகித்து வருகின்றனர். காரைக்கால் நெடுங்காடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான சந்திர பிரியங்கா போக்குவரத்துத் துறை, ஆதி திராவிடர் நலம், வீட்டு வசதி உள்ளிட்ட துறைகளின் அமைச்சராகச் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், திடீரென கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார் அமைச்சர் சந்திர பிரியங்கா. இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தலித், பெண் என இரு பெருமைகளோடு இருந்த எனக்கு அதுதான் மற்றவர்களின் உறுத்தல் என்பது தெரியாமல் போனது. தொடர்ந்து சாதிய ரீதியிலும் பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளாவதாக உணர்ந்தேன். சொந்தப் பிரச்சனைகளை ஆணாதிக்க கும்பல் கையில் எடுத்து காய் நகர்த்துதல் நாகரிகமல்ல. ஆனால் தொடர்ந்து குறிவைக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "கடந்த 6 மாதங்களுக்கு முன்பே சந்திர பிரியங்காவின் பணியில் தொய்வு இருக்கிறது, அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி விரும்பினார். அமைச்சரவையில் இருந்து அவரை நீக்க உள்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டதை அறிந்து சந்திர பிரியங்கா, தானாக ராஜினாமா செய்வது போல் செய்திருக்கிறார்" எனத் தெரிவித்தார்.
இந்தநிலையில் இது தொடர்பாக புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, "முதலமைச்சர் ரங்கசாமி சந்திர பிரியங்காவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு திருமுருகனை அமைச்சராக்க துணைநிலை ஆளுநரிடம் கடிதம் அளித்த நிலையில், அதற்கு உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்துவிட்டது. முதல்வர் ரங்கசாமி சந்திர பிரியங்காவை கலந்தாலோசிக்காமல் அவருடைய பதவியை பறிப்பதற்காக துணைநிலை ஆளுநர் மூலமாக உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளார்.

துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி, பெண் அமைச்சர் ராஜினாமா தொடர்பாக முதலமைச்சருக்கும் அவருக்கும் நடந்த உரையாடல்களை வெளியில் சொல்வது, ரகசிய காப்பு பிரமாணத்திற்கு எதிரானது, முரணானது. எனவே தார்மீகப் பொறுப்பேற்று தமிழிசை சௌந்தரராஜன், துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்.
அமைச்சர் சந்திரபிரியங்கா ராஜினாமா குறித்து முதலமைச்சர் ரங்கசாமி இதுவரை வாய் திறக்கவில்லை. அவரது பதவி விலகல் இதுவரை மர்மமாகவே உள்ளது. சந்திரபிரியங்கா ஜாதி மற்றும் பாலின ரீதியாக தாக்குதலுக்கு உள்ளானதாக மன உளைச்சலுடன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு புதுச்சேரி அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை. இதற்கு முதலமைச்சர் ரங்கசாமிதான் முதல் குற்றவாளி. மத்திய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாமாக முன்வந்து முதல்வர் ரங்கசாமி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications