தேசிய தரவரிசை பொறியியல் பிரிவில் 97-வது இடத்தில் காரைக்கால் புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக் கழகம்!
புதுச்சேரி: மத்திய அரசு வெளியிட்டிருந்த தேசிய தரவரிசை பொறியியல் பிரிவில் காரைக்கால் புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக் கழகம் 97-வது இடத்தைப் பிடித்துள்ளது. புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக் கழகமானது கடந்த ஆண்டு தரவரிசை பட்டியலில் 101-150 இல் இடம்பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு தரவரிசைப் பட்டியலில் 97வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் ஓர் அங்கமான தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF 2024) சார்பில் கற்பித்தல், கற்றல் மற்றும் வளங்கள், ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை நடைமுறைகள், பட்டப்படிப்பு முடிவுகள், போன்றவற்றை அடிப்படியாக கொண்டு ஆண்டுதோறும் பொறியியல், மேலாண்மை, மருந்தகம், கட்டிடக்கலை, சட்டம், மருத்துவம், பல் மருத்துவம், விவசாயம், கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களை வரிசைப்படுத்தி பட்டியலை வெளியிடும் அந்தவகையில் 2024ஆம் ஆண்டிற்கான தரவரிசைப்பட்டியலை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று வெளியிட்டார்.

இதில் தேசிய தொழிற்நுட்பக் கழகம் புதுச்சேரியானது நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப நிறுவனங்களில் பொறியியல் பிரிவில் 97வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் இக்கழகமானது ரேங்க் பேண்ட் 101-150 இல் இடம்பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு தரவரிசைப் பட்டியலில் 97வது இடம் பிடித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அதன் இயக்குனர் முனைவர். மகரந்த் மாதவ் காங்ரேகர் தெரிவித்தார். மேலும் இச்சாதனையை புரிந்தமைக்கு பதிவாளர் முனைவர். சீ. சுந்தரவரதன், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தமது பாராட்டுக்களை அவர் தெரிவித்துக்கொண்டார்.
புதுச்சேரி தொழில் நுட்ப கழகத்தின் இயக்குனர் முனைவர். மகரந்த் மாதவ் காங்ரேகர் பேசுகையில் உள்கட்டமைப்பு மேம்பாடு, ஆராய்ச்சி வசதிகளை உருவாக்குதல், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பலம், ஆராய்ச்சி வெளியீடுகள், காப்புரிமை வழங்குதல், ஸ்பான்சர் செய்யப்பட்ட ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைத் திட்டங்கள், வேலை வாய்ப்பு மற்றும் உயர் படிப்புகள், பட்டமளிப்பு பெற்ற ஆராய்ச்சி மாணவர்கள், பாடத்திட்டத்தில் மாணவர் பங்கேற்பு, இணை பாடத்திட்டம் மற்றும் கூடுதல் பாடத்திட்ட செயல்பாடுகள், என்எஸ்எஸ் மற்றும் என்சிசி செயல்பாடுகள், தொழில் நிறுவன தொடர்பு, சமூக செயல்பாடுகள் மற்றும் முன்னாள் மாணவர்களின் செயல்பாடுகள் போன்றவற்றில் நிறுவனம் அண்மைய ஆண்டுகளில் அதிவேகமாக வளர்ச்சியடைந்துள்ளது என்றும் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் தரவரிசையை எதிர்வரும் ஆண்டுகளில் மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.












Click it and Unblock the Notifications