ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் தமிழக அரசின் மவுனத்தால் மக்கள் அச்சம்.. பேராசிரியர் ஜெயராமன்
புதுவை: ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்து மவுனமாக இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக, போராட்டக் குழுவினர் கூறியுள்ளனர்.
புதுச்சேரியில் நடைபெற்ற வேண்டாம் ஹைட்ரோ கார்பன் என்ற ஆலோசனைக் கூட்டத்தில், சமூக ஆர்வலர்கள் பலரும் பங்கேற்றனர். இதில் பங்கேற்று பேசிய பேராசிரியர் ஜெயராமன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தால் கரிவிரி படுகை மரண பூமியாகிவிடும் என்றார்.
மக்கள் விரும்பாத திட்டங்களை நாங்கள் ஏற்க மாட்டோம் என சொல்கிறார்கள் தமிழகத்தை ஆள்பவர்கள். அப்படி சொல்லாமல் புதுவை மாநில முதல்வர் நாராயணசாமியை போல தெளிவாக, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஏற்க மாட்டோம். அப்படி வந்தால் எதிர்த்து போராடுவோம். நீதிமன்றத்திற்கு செல்வோம் என தமிழக முதல்வரும் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார் ஜெயராமன்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் எல்லாமே முடிந்து விட்டது என அர்த்தம். எனவே தமிழகத்தை காப்பாற்ற தமிழக முதல்வர் முன்வர வேண்டும். ஆனால் தமிழக அரசின் நீண்ட மவுனம் மக்களுக்கு அச்சத்தை தருவதாக அமைந்துள்ளது என்றார்.
காவிரி டெல்டா பகுதிகளை ஒட்டுமொத்தமாக அழிக்கக் கூடிய ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு திணிக்கிறது. இதை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என பேசினார்
இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் ஜெயராமன், மரக்காணத்திலிருந்து வேளாங்கண்ணி வரை 5099 சதுர கிலோ மீட்டர் பரப்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முனைப்புடன் உள்ளது.
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் 20 ஆண்டுகளில் காவிரி படுகை பகுதிகள் கடல் மட்டத்தை விட மிகவும் தாழ்ந்து போய்விடும். இதனால் கடல் நீர் எளிதாக உள்நுழைந்து குடியிருப்புகள் நாசமாகிவிடும். மத்திய அரசு கொண்டு வர நினைக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் சுனாமியை விட பயங்கரமானது. ஏராளமான பேரழிவுகளை ஏற்படுத்தி விடும் என்றார்.
50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த ஊரிலேயே அகதிகளாக மாறிவிடுவார்கள் என வேதனை வெளியிட்டார். இந்த பேராபத்திலிருந்தெல்லாம் காவிரி படுகையை பாதுகாக்க வேண்டுமெனில், காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் காவிரி ஆணையம் தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை பெற்று தருமா என சந்தேகம் எழுப்பியுள்ளார். காவிரி ஆணையத்தை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக நீதிமன்றத்தை அணுக வேண்டும். மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசின் ஒப்புதலை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்பதற்காகவே, கோதாவரி - காவிரி இணைப்பை மத்திய அரசு கையில் எடுத்துள்ளதாக குறிப்பிட்டார். காவிரி நமது உரிமை. அதைப் பாதுகாக்க வேண்டும் என்றார் ஜெயராமன்