பெரியார் குறித்த சர்ச்சை கருத்து.. சீமான் உருவப்படத்தை செருப்பால் அடித்து போராட்டம்.. தபெதிக ஆவேசம்!
புதுச்சேரி: பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் உருவப்படத்தை செருப்பால் அடித்து தபெதிக அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாதக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க சீமான் வந்த நிலையில், அவருக்கு எதிரான திருமண மண்டம் அருகே போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் தொடர்பாக கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி. தமிழ்த் தாய்க்கு என்ன கொம்பா இருக்கு? தமிழ்த் தாய் 3 ஆயிரம் ஆண்டுகளாக என்ன படிக்க வைத்தது என்று கேட்டவர் பெரியார்.

தமிழை சனியன் என்று சொன்ன பெரியார் எந்த மொழியில் எழுதினார்.. அதையும் தமிழில் தான் எழுதினார். உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ, மகளோ, சகோதரியோ.. அவர்களுடன் உறவு வைத்து கொண்டு சந்தோஷமாக இரு என்று கூறியது தான் பெண் உரிமையா? என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்பின் சீமானின் கருத்துக்கு தபெதிக அமைப்பினர் கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.
இதன் காரணமாக இன்று காலை நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டினை பெரியாரிய ஆதரவாளர்கள் மற்றும் தபெதிக அமைப்பினர் முற்றுகையிட முயன்றனர். அப்போது சீமானின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், முற்றுகையிட வந்தவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இருப்பினும் சீமானுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று தபெதிக அமைப்பினர் கூறினர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சீமான் புதுச்சேரி வந்தார். புதுச்சேரி நெல்லித்தோப்பு லெனின் வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயற்குழு கூட்டம் நடக்கவிருந்தது. அதில் கலந்து கொள்வதற்காக 100 அடி சாலையில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் சீமான் தங்கி இருந்தார்.
அப்போது நாம் தமிழர் கட்சியின் செயற்குழு கூட்டம் நடக்கும் தனியார் திருமண மண்டபம் முன்பு ஒன்று திரண்ட தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர் சீமானை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியதுடன் அவரது உருவப் படத்தையும் காலணியால் அடித்து அவமரியாதை செய்தனர். அதேபோல் அப்பகுதியில் இருந்த நாம் தமிழர் கட்சியின் கொடிகளும் சேதப்படுத்தப்பட்டன.
இதனையறிந்த நாம் தமிழர்கள் நிர்வாகிகளும் அங்கு வர, பின்னர் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட தபெதிக அமைப்பினரை கைது செய்து போலீசார் வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். இதன் காரணமாக மீண்டும் அப்பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications