ஹேப்பி நியூஸ்.. புதுச்சேரியில் பெட்ரோல் விலை ரூ.2.43 குறைகிறது.. வாட்வரி 3% குறைக்க ஆளுநர் ஒப்புதல்
புதுச்சேரியிலும் பெட்ரோல்விலை குறைகிறது
புதுச்சேரி: புதுச்சேரியில் பெட்ரோல் மீதான வாட் வரியில் 3% குறைக்க அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ஒப்புதல் அளித்திருக்கிறார்... இதையடுத்து புதுச்சேரியில் பெட்ரோல் விலை 2.43 ரூபாய் குறைகிறது..!
வழக்கமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்துதான், எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருட்களுக்கான விலையை நிர்ணயித்து வருகின்றன..
அதுமட்டுமின்றி சில்லறை விற்பனையில் மத்திய மாநில அரசுகள் வரிகளை விதிப்பதால், பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உச்சத்தை எட்டியுள்ளது.
மேகாலயா
நாடு முழுவதும் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை, சில மாநிலங்கள் குறைத்துள்ளன... அந்த வகையில், ராஜஸ்தான், மேற்குவங்கத்தில் ஒரு ரூபாயும், அசாமில் 5 ரூபாயும் குறைக்கப்பட்டது... அதேபோல, மேகாலயாவில் பெட்ரோல் விலையில் 7 ரூபாய் 40 காசுகளும், டீசல் விலையில் 7 ரூபாய் 10 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளதுடன், மதிப்புகூட்டு வரி 2 ரூபாயும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுவை
தமிழகத்தின் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரிலும், பெட்ரோல் விலை மீதான மதிப்பு கூட்டு வரி 3 ரூபாய் குறைக்கப்பட்டது.. திமுக அரசின் இந்த அறிவிப்பானது பொதுமக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.. தமிழகம் போலவே, புதுவையிலும் பெட்ரோல் விலை குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது...
பெட்ரோல்
இது தொடர்பாக அமைச்சரவையில் முடிவும் எட்டப்பட்ட நிலையில், புதுச்சேரியில் விற்கப்படும் பெட்ரோல் மீதான 3 சதவீதம் வாட் வரியை குறைப்பதற்கான அமைச்சரவையின் முடிவிற்கு துணை நிலை ஆளுனர் தமிழிசை சவுந்தராஜன் ஒப்புதல் அளித்திருக்கிறார்... அதன்படி பெட்ரோல் விலை 2.43 ரூபாய் குறையும், புதுச்சேரியில் 99.52 ரூபாய் ஆகவும் காரைக்காலில் 99.30 ரூபாய் ஆகவும் பெட்ரோல் விற்கப்படும் என ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பு வெளியாகி உள்ளது.
மாற்றம்
இந்நிலையில், இங்கு தமிழகத்தில், சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 99.20 ரூபாய், டீசல் லிட்டர் 93.52 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது... நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.