புதுவையில் நாளை தேர்தல்.. வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
புதுவை: புதுச்சேரி மக்களவை தொகுதிக்கான தேர்தல் மற்றும் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
புதுச்சேரி மக்களவை தொகுதிக்கான தேர்தலில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 18 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதேபோல் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 8 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இத்தேர்தலில் மொத்தம் 9 லட்சத்து 73 ஆயிரத்து 161 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். இதற்காக புதுச்சேரியெல் மொத்தம் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 970 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 2,421 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1147 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1209 விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும் இத்தேர்தலில் காவலர்கள் உட்பட 7,617 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நாளை தேர்தல் நடைபெறுவதையொட்டி, லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அரசு பெண்கள் தொழில்நுட்பக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் வாக்குப்பதிவு மையங்களில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், மாற்றுதிறனாளிகளுக்கு போக்குவரத்து வசதி, சாய்தளம், பார்வையற்ற வாக்காளர்களின் வசதிக்காக பிரெய்லி வாக்குச்சீட்டு, வாக்காளர் உதவி மையம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை தேர்தல் துறை செய்துள்ளது.












Click it and Unblock the Notifications