”நாங்கள் என்ன அனாதைகளா?” காரைக்காலை தமிழ்நாட்டுடன் இணைக்க வலுக்கும் கோரிக்கை.. போஸ்டரால் பரபரப்பு
புதுச்சேரி: காரைக்காலை தமிழ்நாடோடு இணைக்க பொது வாக்குகெடுப்பு நடத்த புதுவை அரசு தயாரா? என்ற கேள்வியுடன் ஆட்சியர் அலுவலகம் எதிரே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருக்கிறது.
Recommended Video
தமிழ்நாட்டுக்கு அருகே தமிழ் பேசும் மக்களை கொண்ட யூனியன் பிரதேசம் புதுச்சேரி. இதன் கட்டுப்பாட்டில் நாகப்பட்டினம் அருகே உள்ள காரைக்கால், ஆந்திரா அருகே உள்ள ஏனாம் ஆகியவை வருகின்றன.
இந்த நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு காரைக்கால் மாவட்ட மக்களை கண்டுகொள்வதில்லை என்றும், காரைக்காலை எல்லா விதங்களிலும் புறக்கணிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. அரசு பணி, விழாக்கள், சாலை வசதி என எந்த ஒரு நல திட்டங்களையும் புதுச்சேரி அரசு காரைக்காலுக்கு செய்து தர முன் வரவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

பல்வேறு அமைப்புகள் இது தொடர்பாக தங்களின் கண்டனத்தை தெரிவித்து வந்த நிலையில் இன்று காரைக்கால் ஆட்சியர் அலுவலகம் மற்றும் காரைக்காலின் முக்கிய இடங்களில் உள்ள சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், "அசிங்கம்! அவமானம்!! வெட்கம்!! புதுவை அரசே..? நாங்கள்... என்ன அனாதைகளா...!
காரைக்கால் மக்களுக்கு காலம் காலமாக எவ்வித அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் வழங்காத புதுவை அரசை நாங்கள் புறக்கணிக்கிறோம். காரைக்காலை தமிழ்நாட்டோடு இணைப்போம். பொது வாக்குகெடுப்பு நடத்த புதுவை அரசே தயாரா?" என குறிப்பிட்டு உள்ளது. மிகச்சிறிய மாநிலமான புதுச்சேரியில் உள்ள காரைக்காலை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் அந்த சுவரொட்டியில் காரைக்கால் தமிழ்நாட்டோடு இணைக்கும் இயக்கம் என குறிப்பிடப்பட்டு மொபைல் எண்களும் அச்சிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications