தனியார் பள்ளி மாணவர்கள் ‛சைக்கோ’ போல் இருப்பார்கள்.. சபாநாயகர் பேச்சால் வெடித்த சர்ச்சை
புதுச்சேரி: தனியார் பள்ளி மாணவர்கள் சைக்கோ மாறி தான் இருப்பார்கள். ஆனால் அரசு பள்ளியில் மாணவர்களின் கல்வி திறன் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பொது அறிவு மட்டுமல்ல உடல் ரீதியாக எந்த நோயும் வருவது இல்லை. மனரீதியான பாதிப்பு என்பதும் வருவது இல்லை. நீங்கள் ஆய்வு நடத்தி பார்த்தாலே உங்களுக்கு நன்றாக தெரியும் என்று புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறியது சர்ச்சையாகி உள்ளது.
AoH (Academic of Hypnosis) மற்றும் InSPA (Indian School Pysichology Association) இணைந்து புதுச்சேரி பல்கலைக் கழக ஆடிட்டோரியத்தில் 2 நாள் சர்வதேச மாநாட்டை நடத்தியது. இன்று நடந்த மாநாட்டில் மத்திய இணையமைச்சர் முருகன் பங்கேற்றார்.

இந்த மாநாட்டில் புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறி கருத்து சர்ச்சையானது. தனியார் பள்ளி மாணவர்கள் சைக்கோ மாறி தான் இருப்பார்கள் என்று கூறியது தான் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இதுதொடர்பாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பேசியதாவது: பல்வேறு தனியார் பள்ளி மாணவர்களின் பாடத்திட்டமே வேறுவிதமாக இருக்கும். 9 ம் வகுப்பு படிக்கும்போதே 10ம் வகுப்பு பாடத்திட்டத்தை முடித்துவிடுவார்கள். 11ம் வகுப்பு படிக்கும்போதே 12ம் வகுப்பு பாடத்திட்டத்தை முடித்துவிடுவார்கள். அந்த மாணவர்களுக்கு உடல் ரீதியாக எந்த பயிற்சியும் கொடுப்பது கிடையாது. உறவு, மனரீதியான பயிற்சி எதுவும் கொடுப்பது கிடையாது.
அந்த 2 ஆண்டுகளில் மாணவர்களின் மனநிலையை மாற்றிவிடுகின்றனர். அவர்களின் மனம் எல்லாம் வேறு ஒரு இடத்துக்கு சென்றுவிடுகிறது. பிள்ளைகள் எல்லாம் டாக்டர், இன்ஜினியர் ஆக வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புகின்றனர் டாக்டர், இன்ஜினியராக இருந்தாலும் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அவர்களின் மனநிலை மாறுகின்றபோது உடல் ரீதியான பாதிப்பு மட்டுமின்றி மனரீதியான பாதிப்பும் வருகிறது. அந்த மாணவர்கள் சைக்கோ மாறிதான் இருப்பார்கள்.
நாங்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது பல மாணவர்களை பார்த்துள்ளோம். ஏனென்றால் காலை 7 மணிக்கு அந்த பள்ளியில் விட்டுவிட்டால் இரவு 9.30 மணிக்கு தான் அழைத்து வர வேண்டும். இன்று பெரும்பாலான தனியார் பள்ளிகள் புதுச்சேரியில் அப்படித்தான் உள்ளது.
ஆனால் அரசு பள்ளிகள் அப்படி கிடையாது. அரசு பள்ளியில் மாணவர்களின் கல்வி திறன் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பொது அறிவு மட்டுமல்ல உடல் ரீதியாக எந்த நோயும் வருவது இல்லை. மனரீதியான பாதிப்பு என்பதும் வருவது இல்லை. நீங்கள் ஆய்வு நடத்தி பார்த்தாலே உங்களுக்கு நன்றாக தெரியும்'' என்றார்.
இப்படி சர்ச்சையாக பேசி உள்ள ஏம்பலம் செல்வம் பாஜக கட்சியை சேர்ந்தவர். இவர் மணவெளி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. முதல்வராக என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி உள்ள நிலையில் பாஜகவின் ஏம்பலம் செல்வத்துக்கு சபாநாயகர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications