புதுச்சேரியில் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகும்... இனிப்பு கொடுத்து கொண்டாடத் தடை
கொரோனா தொற்று காரணமாக வாக்கு எண்ணிக்கை அறையில் 7 டேபிள் 5ஆக குறைக்கப்பட்டுள்ளதால் தேர்தல் முடிவுகள் வர சற்று காலதாமதம் ஆகலாம் என புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான பூர்வா கார்க் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி: கொரோனா தொற்று காரணமாக வாக்கு எண்ணும் அறையில் டேபிள்கள் குறைக்கப்பட்டுள்ளதால் தேர்தல் முடிவுகள் தெரியவர நள்ளிரவாகும் என்று தேர்தல் அதிகாரி பூர்வா கார்க் கூறியுள்ளார். கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. எனவே கூட்டம் கூடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைவரும் கண்டிப்பாக தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள 30 சட்டசபைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே.2-ம் தேதி நடைபெற உள்ளது. புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை லாஸ்பேட்டை அரசு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி, மோதிலால் நேரு அரசு ஆண்கள் தொழில்நுட்பக் கல்லூரி, தாகூர் கலைக்கல்லூரி ஆகிய 3 மையங்களில் நடைபெறுகிறது.

காரைக்காலின் 5 தொகுதிகளுக்கு காரைக்கால் அண்ணா கலைக்கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நாளில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசியல் கட்சித்தலைவர்களுடன் தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான பூர்வா கார்க் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் மத்திய அரசின் கொரோனா விதிமுறைகள், இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள், உயர்நீதிமன்ற உத்தரவு ஆகியவை வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்றப்பட உள்ளதாக தெரிவித்தார்.
கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யும் சான்றிதழை வைத்திருக்க வேண்டும் அல்லது 2 முறை கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்தினுள் அனுமதி வழங்கப்படும் என்று கூறினார்.
கண்டிப்பாக அடையாள அட்டை அணிந்து கொண்டு வர வேண்டும்.
கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. எனவே கூட்டம் கூடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைவரும் கண்டிப்பாக தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அங்கு முகக்கவசம் உள்ளிட்டவை வழங்கப்படும். பிபிஇ கிட் வேண்டுமாலும் வாங்கிக் கொள்ளலாம். தேவைப்பட்டால் ரேபிட் கிட் முறையில் கொரோனா பரிசோதனையும் செய்து கொள்ளலாம் என்றும் பூர்வா கார்க் கூறினார்.
ஏற்கனவே ஒரு அறைக்கு 7 டேபிள்கள் போடப்பட்டது. தற்போது கொரோனா விதிகளை பின்பற்றப்படுவதால் ஒரு அறைக்கு 5 டேபிள்கள் போடப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் முடிவுகள் வர சற்று காலதாமதம் ஆகலாம்.
புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகளில் காலை 8 மணிக்கு, முதல் 8 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். முன்னணி நிலவரம் 10 மணிக்கு தெரியவரும். இதன் முடிவு 12.30 மணி வரை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது கட்டமாக 1 மணிக்கு 8 தொகுதிகள் எண்ணப்படுகிறது. அதன் முடிவுகள் தெரிய 6 மணி வரை ஆகலாம்.
இறுதியாக மாலை 6 மணிக்கு 7 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதன் முடிவு தெரிய நள்ளிரவு வரை ஆகலாம். ஒவ்வொரு தொகுதிக்கும் 4 முதல் 5 சுற்றுவரை செல்ல வாய்ப்புகள் உள்ளது என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.
வெற்றி வேட்பாளர் சான்றிதழ் பெற வரும்போது 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி வெற்றி ஊர்வலம் நடத்தக்கூடாது. அதே போல் வெற்றிபெற்ற உடன் இனிப்பும் வழங்கக்கூடாது.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போது 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்கள் மட்டுமின்றி, நகரம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டிருப்பார்கள். ஆகவே மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் தேர்தல் அதிகாரி பூர்வா கார்க் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications