புதுச்சேரியில் முதல்வர் பதவிக்கு மல்லுக்கட்டும் பாஜக.., விட்டுத்தருவாரா ரங்கசாமி - கலாட்டா ஆரம்பம்
புதுச்சேரியில் முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என பாஜக மேலிட பெறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா கூறியுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் சேர்ந்து முடிவு செய்வார்கள் என நிர்மல் குமா
புதுச்சேரி: தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் சேர்ந்து முதல்வரை முடிவு செய்வார்கள் என பாஜக மேலிட பெறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் எனவும் நிர்மல் குமார் சுரானா தெரிவித்துள்ளார். 6 தொகுதிகளில் வென்றுள்ள பாஜக என் ஆர் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமைச்சரவையில் பங்கு கேட்பதோடு முதல்வர் பதவியையும் தங்களுக்கே தர வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி மாநில சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க 9 தொகுதிகளிலும், அ.தி.மு.க 5 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
அதேபோல காங்கிரஸ் கட்சியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தி.மு.க 13 தொகுதிகளிலும், வி.சி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.

தேர்தல் முடிவுகள்
புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இதில் 81.70 சதவீத வாக்குகள் பதிவாகின.புதுச்சேரி மாநிலம் முழுவதும் 6 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடந்தது. முடிவுகள் 3 கட்டங்களாக அறிவிக்கப்பட்டன.

என் ஆர் காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி
தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்ட என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 6 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணியில் காங்கிரஸ் 2 இடங்களிலும் திமுக 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சைகள் 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

பாஜக என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி
புதுச்சேரியில் ஆட்சி அமைக்க 16 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 6 இடங்களை பிடித்துள்ளது. பாஜக ஆதரவுடன்தான் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியும். எனவே, அங்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

எம்எல்ஏக்கள் தேர்வு செய்வார்கள்
என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் எம்எல்ஏக்கள் கூடி முதல்வரை தேர்வு செய்வார்கள் என்று பாஜக மேலிட பெறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் இன்று பேசிய நிர்மல் குமார் சுரானா, முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பாஜக அடம்
புதுச்சேரியில் பாஜக என் ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தாலும் முதல்வர் பதவியை எதிர்பார்க்கிறது பாஜக. ஆனால் முதல்வர் பதவி தவிர அமைச்சர் பதவியில் எந்த இலாக்காவை கேட்டாலும் தர தயாராக இருப்பதாக ரங்கசாமி கூறியுள்ளார்.

சுயேட்சைகள் தயவு தேவை
முதல்வராகவேண்டும் என்று கடந்த 5 ஆண்டு காலமாக காத்திருக்கும் என். ரங்கசாமி, பாஜகவிற்கு அந்த பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. எனவே தேர்தலில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் ஆதரவுடன் ஆட்சியமைக்கலாமா என்று ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

5 ஆண்டுகளாக குழப்பம்
புதுச்சேரியில் கடந்த 2016 சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வெற்றி பெற்றது. நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே தொடக்கத் தில் இருந்தே பனிப்போர் நிலவியது. யாருக்கு அதிகாரம் என்பதில் இரு வருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால், 5 ஆண்டுகளாக புதுவையில் குழப்ப நிலை நீடித்தது. கடைசியில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களே பாஜகவிற்கு மாறினர். சொந்த கட்சி உறுப்பினர்களே காலை வாரி விட்டதால் நாராயணசாமி ஆட்சி கவிழ்ந்தது. குடியரசுத்தலைவர் ஆட்சி அமலானது.

என்ன செய்யப்போகிறார் ரங்கசாமி
தற்போது பாஜகவை விட்டு விட்டு சுயேட்சைகள் ஆதரவுடன் அரியணையில் ஏறினாலும் நித்திய கண்டம் பூரண ஆயுசாகத்தான் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என். ரங்கசாமி. என்ன செய்யப் போகிறார். முதல்வர் நாற்காலியை விட்டுத்தருவாரா? அல்லது பாஜக உடன் மல்லுக்கட்டுவாரா பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications